You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகரின் கள நிலவரம்
- எழுதியவர், ஆமீர் பீர்சாதா
- பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகரில் இருந்து
கடந்த வாரம் வெள்ளியன்று, மசூதியில் தொழுகை நடந்து முடிந்தபின் ஸ்ரீநகரில் பெரும் அளவில் போராட்டம் நடந்த சௌரா பகுதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்றும் பிபிசி குழு சென்றது.
ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை நடந்த இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
சௌரா பகுதிக்கு பிபிசி குழு இன்று சென்றபோது தெருக்கள் எங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை நீக்கப்பட்டால் பெரும் அளவில் கூட்டம் கூடலாம் என்று பாதுகாப்பு படையினர் கருதினார்கள். போராட்டக்காரர்கள் முக்கியச் சாலைக்கு வந்துவிட்டால் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கையாள்வது கடினம் என்று அவர்கள் கருதினார்கள்.
இன்று மாலை தொழுகைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சௌராவில் உள்ள மசூதிக்கு வந்தனர். ஆண்களும் பெண்களும் அமைதியாக ஊர்வலம் சென்றபின் மீண்டும் மசூதிக்கே வந்தடைந்தனர்.
பேரணிக்கு பிறகு காஷ்மீர் விடுதலை குறித்த பாடல்கள் தர்காவின் ஒலிபெருக்கிகளில் கேட்க முடிந்தது. இந்த ஒலிபெருக்கிகள் மூலம்தான் போராட்டத்தில் வந்து கலந்துகொள்ளுமாறு இன்று காலை முதல் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்திய அரசிடம் தங்கள் உரிமையையே தாங்கள் திரும்பக் கேட்பதாக பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன்மூலம் காஷ்மீரை இந்திய அரசு ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது என்றார் பேரணியில் பங்கேற்ற பெண் ஒருவர்.
அப்பெண் இவ்வாறு கூறுகிறார். "நாங்கள் இந்தியாவுடனும் இருக்க விரும்பவில்லை; பாகிஸ்தான் உடன் இருக்கவும் விரும்பவில்லை; எங்களுக்குத் தேவை சுதந்திர காஷ்மீர்."
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்