You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: “இருதரப்பு பேச்சுவார்த்தை போதும், அமெரிக்கா வேண்டாம்” - டிரம்ப் கூறியதை மறுக்கும் அமைச்சர் ஜெய்சங்கர்
காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இவ்வாறாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆனால், இதனை மறுக்கிறது இந்தியா.
அழைக்கவில்லை
அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா அமெரிக்காவை வேண்டவில்லை. பாகிஸ்தானுடனான அனைத்து விவகாரத்தையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது " என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னிப்பு
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ப்ராட் ஷெர்மன், அமெரிக்காவுக்கான இந்திய தூதரிடம் இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
டிரம்பின் கற்றுக்குட்டித்தனமான, சங்கடம் அளிக்கக்கூடிய தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
‘மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோதி கோரவில்லை’
மக்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், " அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோதி கோரவில்லை." என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர், "இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது." என்று கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்