You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் அவசர காலச் சட்டம் மூன்றாவது முறையாக நீட்டிப்பு
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்னவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அடுத்த நாள் முதல் அவசர காலச் சட்டம் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசர காலச்சட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வருகின்றார்.
இதன்படி, மூன்றாவது தடவையாகவும் இன்று முதல் எதிர்வரும் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 9 வருடங்களுக்கு அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றும் சிறைச்சாலைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்