You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதாப் சந்திர சாரங்கி: குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக் கொள்ளும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது.
பிரதாப் சந்திர சாரங்கியை ஒடிஷா மாநிலத்திற்கு வெளியே யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரது புகைப்படம் பரவலாக பகிரப்பட்டது. பிரதாப் சந்திர சாரங்கி, அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக தனது குடிசையில் இருந்து வெளியே வந்த புகைப்படம்தான் அது. இது பல்வேறு தரப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால், தற்போது பிரபலமாகியுள்ள இந்த மனிதரின், கடந்தகால நிகழ்வுகள் என்ன?
1997ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள் இந்து கும்பலால் கொல்லப்பட்டபோது, தீவிர வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் தலைராக பிரதாப் சந்திர சாரங்கிர் இருந்தார்.
இந்த கொலைகளுக்கு பஜ்ரங்க தளம் அமைப்புதான் காரணம் என்று கிறிஸ்துவ சமூகத்தினர் குற்றஞ்சாட்டினர். ஆனால், இது தொடர்பாக அதிபாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டதில், அந்தக் கொலைக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு, இந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த தாரா சிங் மற்றும் 12 பேருக்கு 2003ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தாரா சிங்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டது.
மேலும், 11 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கிறிஸ்துவ மிஷனிரிகளுக்கு எதிராக பிரதாப் சாரங்கி பல முறை நேர்காணல் அளித்துள்ளதாக கூறுகிறார் ஒடிஷாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சந்தீப் சாஹு.
அதுமட்டுமல்லாது, 2002ஆம் ஆண்டு பஜரங் தளம் உள்ளிட்ட சில வலதுசாரி குழுக்கள் ஒடிஷா மாநில சட்டசபை மீது தாக்குதல் நடத்தியதில், கலவரம், தாக்குதல் நடத்தியது, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தது என பல்வேறு பிரிவுகளில் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார்.
எனினும், அதையெல்லாம் விடுத்து, அவரது எளிமையான வாழ்க்கைக்காக சமூக ஊடகங்களில் இவர் பிரபலமாகிறார்.
"அவரது தொகுதி முழுவதும் சைக்கிளிலேயே சாரங்கி சுற்றி வருவார். ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்காளர்களை சந்திப்பார். புவனேஷ்வரில் சட்டமன்றத்துக்கு, பெரும்பாலும் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் அவர் செல்வார். சாலையோர கடைகளில் அவர் சாப்பிடுவதையும், ரயில்வே நடைமேடைகளில் ரயிலுக்காக அவர் காத்திருப்பதையும் நாம் காண முடியும்" என்கிறார் சாஹு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இவருக்கு எதிராக போட்டியிட்ட இரண்டு பணக்கார போட்டியாளர்களை தோற்கடித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று பிரதாப் சாரங்கி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அவரது தொகுதியில் உள்ள ஆதராவளர்கள் பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் வழங்குவது என கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். சிலர் இவரை 'ஒடிஷாவின் மோதி' என்று அழைக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிரபலமாவதில் இதுதான் சிக்கல். ஒரே ஒரு புகைப்படம் வைரலாவதை வைத்து அவர் குறித்த பின்பம் பொதுமக்களிடையே உருவாகிவிடுகிறது.
அது அந்த குறிப்பிட்ட நபர்களை ஹீரோவாக்கி விடுகிறது. அவருடைய கடந்தகாலம் என்ன? என்ன செய்திருக்கிறார்கள்? போன்ற எந்த ஆழமான சிந்தனையும் இருப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்