You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த விமானம்
இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இன்று, வெள்ளிக்கிழமை, இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, கட்ச் பாலைவனத்தின் வான்வெளியில் இந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது.
அந்த விமானத்தில் உள்ள பொருட்களை சோதனை செய்ய அருகில் உள்ள தளங்களில் உள்ள குழுவினைரை இந்திய விமானப்படை ஜெய்ப்பூருக்கு அனுப்பவுள்ளது.
"கராச்சியில் இருந்து டெல்லி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த அந்த ஆண்டனோவ் ஏ.என்-12 விமானம், தாம் பயணிக்க வேண்டிய பாதையில் இருந்து விலகி, குஜராத்தின் வடக்குப் பகுதியில், பறக்க அனுமதி இல்லாத வான்வெளிக்குள் நுழைந்தது. மிகவும் எச்சரிக்கையாக இருந்த இந்திய விமானப்படை விமானத்தால் தடுத்து, இடைமறிக்கப்பட்டு அது தரையிறங்க வைக்கப்பட்டது," என இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் குரூப் கேப்டன் அனுபம் பானர்ஜீ கூறியுள்ளார்.
அந்த ஜார்ஜிய விமானம் அனுமதி வழங்கப்படாத வான்வெளியில் பறப்பது ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரு சுகோய்-30 எம்.கே.ஐ ஃபைட்டர் விமானங்களை அவை இயக்கத் தாயாராக்கியதாக செய்திகள் கிடைத்திருப்பதாக ஏ.என்.ஐ கூறுகிறது.
முதலில் பதில் சமிக்ஞை எதையும் தராத அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் கீழிறங்க தொடங்கியது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்