உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

ரஞ்சன் கோகாய்

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் ஒன்றை எழுதி இருந்தார்.

புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக உள்விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்விசாரணைக்குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டதோடு, இதில் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனோஜ் மிட்டா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கு தொடுத்த பெண் மற்றும் நீதிபதி சந்திரசூட்டின் தெரிவித்த கவலைகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு புகாரில் 'எவ்வித அர்த்தமும் இல்லை' என்று உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை குழு அறிவித்துள்ளது, சட்டத்தின் ஆட்சிக்கும், நாட்டின் உட்சபட்ச நீதி அமைப்பின் மீதான நம்பகத்தன்மைக்கும் ஏற்பட்டுள்ள பெருத்த அடி.

மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் விரிவான ஒரு புகாரை உச்ச நீதிமன்றம் இதுபோன்ற அறிவிப்புடன் விட்டு விட முடியாது.

உச்சநீதிமன்றத்தின் உள் விவகாரக் குழு தனது முழு அறிக்கையையும் வெளியிட முடியாவிட்டால், குறைந்தபட்சம் எதன் அடிப்படையில் கோகாய் இந்த புகாரிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பதற்கான விளக்கத்தையாவது வெளியிட வேண்டும்" என்று அவர் மனோஜ் மிட்டா தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

இந்த புகார் தொடர்பான தீர்ப்பு குறித்து அதை எழுப்பிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

"உச்ச நீதிமன்றத்தின் உள் விவகாரக் குழு நான் எழுப்பிய புகாரில் 'எவ்வித அர்த்தமும் இல்லை' என்று கூறியது என்னை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளதுடன், இந்திய நாட்டின் பெண்ணாக எனக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நான் உணருகிறேன்.

நான் தற்போது மிகவும் பயமாக உணருகிறேன். ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உள் விவகாரக் குழுவுக்கு விரிவான விளக்கத்தை தந்தும் கூட, எனக்கு நீதியும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை. மாறாக பணிநீக்கம், அவமதிப்பையும்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம். நானும் எனது குடும்பத்தினரும் நடந்துவரும் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கு தொடர்ந்து பாதிக்கப்படக் கூடிய நிலையிலேயே இருக்கிறோம்.

இன்று என்னுடைய மோசமான பயங்கள் உண்மையாகிவிட்டன. இதன் மூலம் நாட்டின் உட்சபட்ச நீதி அமைப்பின் மீதான எனது நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீதான முடிவு குறித்த முழு அறிக்கை எனக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதன் அடிப்படையில் என் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன என்று கூட எனக்கு தெரியவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அக்குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதி என்.வி ரமணாவுக்கு பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா இருப்பார் என்று பிறகு அறிவிக்கப்பட்டது.

நீதிபதி ரமணா அக்குழுவில் இடம் பெற்றிருந்ததற்கு, குற்றச்சாட்டு வைத்த பெண் ஒப்புக் கொள்ளவில்லை.

அந்த விசாரணைக்குழுவிற்கு நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமை வகித்தார்.

ரமணாவுக்கு பதிலாக இந்து மல்ஹோத்ரா சேர்க்கப்பட்ட பின்னர், தலைமை நீதிபதிக்கு எதிராக வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் இரண்டு பெண்கள் இடம் பெற்றார்கள்.

சட்டப்படி இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் குழுவில் குறைந்தது 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும்.

யார் இந்த ரஞ்சன் கோகாய்?

ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்றார்.

ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கெசாப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர் ஒருவர், உங்களது மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்று கேட்டார். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞர் என்றும், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கெசாப் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சனும் மற்ற சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளும் மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :