இந்தியாவில் கள்ள ஓட்டுக்கு சான்றாக பயன்படுத்தப்படும் இலங்கையின் போலிக் காணொளி #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை சரிபார்ப்புக் குழு
    • பதவி, பிபிசி

இலங்கையில் சமீபத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளோடு தொடர்புடைய குற்றச்சாட்டில் புர்கா அணிந்திருந்த ஆண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்வதை காட்டுகிற போலிக் காணொளி, முகத்தை மூடிக்கொள்வது கள்ள ஓட்டு போட வசதியாக அமைகிறது என்ற செய்தியோடு இந்தியாவில் பகிரப்பட்டு வருகிறது,

இந்த கருத்து தெரிவிக்கப்பட்டு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்படும் இந்த காணொளி லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

ஆனால், இந்த காணொளிக்கும், இந்தியாவில் நடைபெறுகின்ற தேர்தல்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த காணொளி போலியானது என்று பிபிசி கடந்த வாரத்தில்தான் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஒரு பௌத்தர் என்றும், தேவாலங்களிலும், உயர்தர ஹோட்டல்களிலும் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட காரணமான சமீபத்திய இலங்கை குண்டுவெடிப்புகளில் இந்த நபருக்கு பங்குள்ளது என்றும் தெரிவித்து இந்த காணொளி முன்னர் பகிரப்பட்டிருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பிறகு, இலங்கையில் நிகழ்ந்துள்ள மிகவும் மோசமான வன்முறை இதுவாகும்.

"முஸ்லிம் பெண்ணை போன்று உடை உடுத்தியுள்ள பௌத்த சமயத்தை சேர்ந்த ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய முரடர்களில் இவரும் ஒருவர்" என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்த இந்த காணொளியில் பதிவிடப்பட்டிருந்தது.

48 மணிநேரத்தில் இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளதுடன் இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

இதனுடைய உண்மை தன்மையை ஆராய்ந்து கண்டுபிடிக்க, பிபிசியின் வாட்ஸ்அப் வாசகர்கள் இதனை பிபிசிக்கு அனுப்பியும் வைத்தனர்.

இந்நிலையில், இந்த காணொளி தொடர்பான பின்னணி தகவல்களை ஆராய்ந்ததில், இது போலியானது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த கண்ணோட்டத்தில், சிலர் இந்த காணொளியை பரப்பியுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும், இலங்கை காவல்துறையினர் இந்த குண்டுவெடிப்புகளை பற்றி புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் இஸ்லாமியவாத குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்த குண்டுவெடிப்பகளுக்கு காரணமென இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

.இந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களென இலங்கையை சேர்ந்த 40 பேரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது.

ஆனால், உள்ளூர்காரர்களால் மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதற்கான சான்றுகளை வழங்காமல் இருந்தாலும், இலங்கை தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு அதனுடைய அதிகாரபூர்வ ஊடகம் வழியாக அறிவித்துள்ளது.

இந்த காணொளி உண்மையா?

36 வினாடிகள் மட்டுமே இருக்கும் காணொளியில் புர்கா அணிந்திருக்கும் ஆண் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரிப்பதை பார்க்கலாம்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இந்த காணொளியை இலங்கையின் உள்ளூர் ஊடக வலையமைப்பான "நீத் நியூஸ்" பகிர்ந்துள்ளதை ரிவர்ஸ் இமேஸ் தேடலின் மூலம் அறிய முடிகிறது.

இலங்கையின் தலைநகரான கொழும்புவின் எல்லை பகுதியான ராஜ்கிரிய மாகாணத்தில் இந்த மனிதர் கைது செய்யப்பட்டதாக இன்னொரு செய்தி தகவல் தெரிவிக்கிறது.

வெலிக்கடை பிளாசா பொது வணிக வளாகத்திற்கு மூன்று சக்கர வாகனம் ஒன்றில் வந்தபோது, புர்கா அணிந்திருந்த இந்த மனிதர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று சக்கர வாகனம் ஓட்டியவர், அந்த மனிதர் மீது சந்தேகப்பட்டு, காவல்துறையினரிடம் இந்த நபர் பற்றி தெரிவித்துள்ளார்.

"நீத் நியூஸை" மேற்கோள்காட்டி இலங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "எக்ஸ்பிரஸ் செய்தி" இணையதளம் இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய ஒரு ஃபேஸ்புக் பக்கமான "நீத் ஃஎப்எம்", 2018ம் ஆண்டு வெளியான இந்த காணொளி தவறான கருத்தோடு சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை ஏப்ரல் 22ம் தேதி தெளிவுப்படுத்தியுள்ளது.

"விழிப்புணர்வு குறிப்பு! இந்த காணொளி இத்தருணத்தில் இணையதளத்தில் பரவி வருகிறது; 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியிடப்பட்ட காணொளி இதுவாகும்" என்று தெளிவுப்படுத்தும் விதமாக குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :