நரேந்திர மோதி பற்றிய திரைப்படம் தேர்தலில் பா.ஜ.கவுக்கு உதவுமா? - தேர்தலும் திரை உலகமும்

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP/GETTY IMAGES
"தீவிரவாதத்துக்கு இந்தியா அஞ்சாது" என்ற வசனத்துடன் காஷ்மீரின் பனி போர்த்திய பாதைகளில் கொடியசைத்துக் கொண்டு நடக்க, அவர் பின் பல ராணுவ வீரர்கள் நடக்கிறார்கள்.
அது வேறு யாருமல்ல பிரதமர் மோதியாக நடிக்கும் நபர். இது வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக உள்ள 'பிரதமர் நரேந்திர மோதி' பட ட்ரைலரில் வரும் ஒரு காட்சி. இப்படம் ஒரு அப்பட்டமான அரசியல் நகர்வு என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இப்படத்தில் கட்சியின் பங்கீடு ஏதுமில்லை. ஆனால், இதில் பிரதமர் மோதியாக நடிக்கும் விவேக் ஓப்ராய், ஒரு மோதி ஆதரவாளராக அறியப்படுபவர். இந்த மாதத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது, பேசிய விவேக் ஓப்ராய், "மோதி ஹை டூ மம்கின் ஹே" (மோதியால் அனைத்தையும் சாத்தியமாக்க முடியும்) என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
மூத்த பாஜக தலைவர்கள் சிலர், இப்படத்தை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி படம் வெளியாவது தேர்தல் நடத்தை விதிமீறலா என்று தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வரும் நிலையில், சொந்த பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், BJP
இந்திய மக்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோதி ஒரு சிறந்த மனிதர் என்றும் அதனை மக்களுக்கு கூறவே இந்த படத்தை எடுத்ததாகவும் இதன் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் சந்தீப் சிங் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
"அரசியல் அல்லது அரசியல்வாதிகள் அல்லது எந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எதிர்க்கட்சிகள் இந்த படம் குறித்து அச்சப்பட்டால், தங்கள் தேசத்திற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அவர்கள் செய்தது பற்றி அவர்களுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லையா?" என்று பிபிசியிடம் பேசியபோது சந்தீப் கேள்வி எழுப்புகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் மட்டுமே வெளியிடப்பட்டாலும், இது ஒரு பிரச்சார யுக்தி என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், TWITTER / VIVEK ANAND OBEROI
"இந்த நேரம்தான் சந்தேகப்பட வைக்கிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, ஏப்ரலில் படம் வெளியாகிறது. சரியாக தேர்தலுக்கு முன்பு இப்படம் வெளியாகிறது" என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் சினிமா விமர்சகரான ராஜா சென்.
பிரதமர் சிறு வயதில் ரயில்களில் தேநீர் விற்றதில் இருந்து, ஆர் எஸ் எஸ்-ல் இருந்த நாட்கள், சுமார் 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்தது வரை இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
2002 குஜராத் கலவரத்தின்போது, பிரதமர் மோதி மன உளைச்சலுடன் இருப்பது போன்ற காட்சி ட்ரைலரில் வருவதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்கலவரத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மோதி முதல்வராக இருந்தபோது அக்கலவரம் நடந்ததாகவும், அதனை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"பிரதமர் மோதியின் வாழ்க்கைக் குறித்த புனைவு இது" என்கிறார் Narendra Modi: The Man, The Times புத்தகத்தை எழுதியவரும், பத்திரிக்கையாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய்.
இப்படத்தின் ட்ரைலரில் மற்றுமொரு காட்சியும் வரும். அதில், காஷ்மீரில் ஒரு பாலத்தில் மோதி மற்றும் ராணுவ வீரர்கள் தாக்கப்பட வரும்போது, மோதி ஒரு பெரிய தேசியக் கொடியை அசைப்பார். இது மோதியின் கடந்த கால நிகழ்வுகளை சமகாலத்துடன் பொருத்தும் அரசியல் கதை என்கிறார் நிலஞ்சன்.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள், தேர்தல் நேரத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று விவாதித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் படம் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டால், மோதியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வெப் சீரிஸ் வெளியாவதிலும் சிக்கல் ஏற்படும். 10 அத்யாயங்களை கொண்ட Modi: Journey of a Common Man தொடர் எரோஸ் நவ் தளத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், INSTAGRAM/ KARAN JOHAR
முன்னதாக உரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற படம் வெளியாகி, மோதியின் தேசியவாத நற்பெயரை வலுப்படுத்தியது. அப்படம் வெளியாகி சரியாக ஆறு வாரங்கள் கழித்து பாகிஸ்தான் மீது விமான இந்தியா தாக்குதல் நடத்தியது.
தற்போது பாஜக ஆதரவாளர்கள் இடையே 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' என்ற வாசகமே வசனமாகி போயுள்ளது.
பல தசாப்தங்களாக இந்திய சினிமா துறை தணிக்கைக் குழுவால் கடுமையான கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வலிமையான அரசியல் படம் என்பதும் அரிதாகியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் வெளியான படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உள்ளதாக கூறுகிறார் ராஜா சென்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












