You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபிநந்தன் பிடிபட்டது எப்படி? பாகிஸ்தானில் நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
- எழுதியவர், இலியாஸ் கான்
- பதவி, பிபிசி
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் எவ்வாறு பாகிஸ்தானில் தரையிறங்கினார், எப்படி அவர் இந்தியர் என்று அவர்களுக்குத்தெரிய வந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரிக்கிறார், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் உள்ள ஹொரன் கிராமத்தை சேர்ந்த மொஹமத் ரசாக் சௌத்ரி. இவருக்கு வயது 58.
அவரது வார்த்தைகளில்…
"விமானி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றுதான் நான் தனிப்பட்ட முறையில் எண்ணினேன். அவரது பாராசூட்டில் இந்தியக் கொடி இருந்ததை வைத்து, அவர் இந்தியர் என்பது தெரிய வந்தது. அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து, அவர் பறந்து நிலத்தை அடைவதை நான் பார்த்தேன். அவரைப் பார்த்து அங்கு விரைந்த உள்ளூர் மக்கள், அவரைத் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினேன்.
அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநன்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக முழக்கம் எழுப்பினார். அதற்கு எதிராக லாங் லிவ் பாகிஸ்தான் என்று அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது எனது மைத்துனர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.
அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
எங்கள் இளைஞர்கள் கோபமாக இருந்தனர். அவரை அடித்தும், அறையவும் அவர் அருகில் சென்றனர். சிலர் அதனை தடுக்க முயன்றனர். நானும், அவரை தாக்க வேண்டாம் என்றும் ராணுவம் வரும்வரை அவரை தனியாக வைக்கவும் கூறினேன்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்