நிலக்கரி இறங்குதளம் அமைப்பதை எதிர்த்து, கடலில் இறங்கி போராடிய மீனவர்கள்

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்தும், தூண்டில் பாலம் அமைத்து தர வலியுறுத்தியும், ஆலந்தலை மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லாமல் படகில் கறுப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர்
திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் கடந்த 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ரூ. 8,990 கோடி மதிப்பில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உடன் குடி அனல் மின் நிலையத்திற்கு அடிகல் நாட்டினார்.
ஆனால், நிதி பற்றக்குறையால் இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் 2018 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன்குடி அனல் மின்நிலைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலைய திட்டம் 10,000 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழி அருகே கடலில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாலம் கட்டப்படுவதால் ஆலந்தலை மீனவ கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை ஆலந்தலையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், சுமார் 200 நாட்டுப்படகுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தப்பட்டது.

நிலக்கரி இறங்குதள பாலம் அமைவதால் மண் அரிப்பு ஏற்பட்டு கிராமம் அழிவதுடன், மீனவர்களால் அப்பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் ஆலந்தலை பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இறங்குதள பாலம், மற்றும் ஆலந்தலை பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மீனவர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'இந்த போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. எங்களது போரட்டம் உடன்குடி அனல் மின் நிலையத்தை எதிர்த்து அல்ல. அதற்கு கடலில் அமையும் பாலத்தை கட்டாமல் தடுத்தது நிறுத்த கோரி நடத்தப்படுகிறது. இந்த பாலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும்.

அதோடு, ஆலந்தலை மிகவும் 'பழமையான கிராமம். இங்கு கட்டப்படும் பாலத்தால் கிராமம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் அதனை தடுக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
எங்களிடம் பேச்சுவார்த்ததை நடத்திய மாவட்ட கண்காணிப்பாளர் இரண்டு நாட்களில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவித்ததையடுத்து தற்காலிமாக போராட்டத்தை நிறுத்தியுள்ளளோம்
இரண்டு நாட்களில் பாலம் கட்டும் பணிகளை கைவிடாவிட்டால் பல்வேறு போரட்டங்கள் நடத்தப்படும் என்கிறார் ரமேஷ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












