You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிஐ புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமனம்
இந்திய மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. ரிஷி குமார் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.
முன்னதாக சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.
அலோக் வர்மா அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம் என்றும் ஆனால், மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதனையடுத்து மீண்டும் பிரதமர் மோதி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு, அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து மீண்டும் நீக்கி அவரை தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்தது.
நாகேஸ்வரராவ் தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே, தன் பணியை ஏற்க மறுத்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதிய அலோக் வர்மா, பணியில் இருந்தும் விலகினார்.
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் முன்னர் தம்மிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், தமக்கு இயற்கை நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான், புதிய இயக்குநராக ரிஷி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்