கர்நாடக இடைத்தேர்தல்: பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன?

பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதிகளில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளுக்கு அண்மைக் காலத்தில் விடுத்திருக்கும் மிக வலிமையான தகவலாக அமைந்திருக்கிறது. அந்தக் கட்சிகள் ``ஒன்றுபட்டால் பாஜகவை வென்றிட முடியும்'' என்ற தகவலை இந்த வெற்றிகள் உணர்த்தியுள்ளன.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமிக்கு முதல்வர் பதவியை அளிக்க முன்வந்த, அரசியல் பகடை விளையாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு இப்போது பலன் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. ஷிமோகா மக்களவைத் தொகுதியை மட்டும் அந்தக் கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்திருக்கிறது.

ஆனால், ஜமகண்டி போன்ற லிங்காயத்துகள் (கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்) ஆதிக்கம் செலுத்தும் தொகுதியில்கூட, கட்சியில் உள்ள கோஷ்டி மோதல்களால் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்துவிட முடியும் என்பதையும் இந்த முடிவுகள் காட்டியுள்ளன.

Presentational grey line
Presentational grey line

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மாண்டியா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), பெல்லாரி (பழங்குடியினர் தொகுதி - காங்கிரஸ்) ஆகிய மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது. பாஜக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ராமநகரம் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) மற்றும் ஜமகண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இந்தக் கூட்டணி வென்றிருக்கிறது.

எடியூரப்பாவின் மகனான பாஜக வேட்பாளர் பி.ஒய். ராகவேந்திரா , மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மது பங்காரப்பாவை 52,000 -க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சிவமோகா மக்களவைத் தொகுதியில் வென்றிருக்கிறார். இந்தத் தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

ஆனால், பாஜகவின் கோட்டையான பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 2.43 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கே கூட வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

``மாநிலக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்துள்ள கர்நாடகாவில் இருந்து வெளிப்பட்டிருக்கும் வலுவான தகவலாக இது இருக்கிறது. மாநில அளவிலான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, ஒன்றுபட்டு செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் வலுவான கூட்டணி என்பது பலவீனமாகிவிடும் என்ற தகவலை தேசியக் கட்சிகளுக்கு உணர்த்துவதாக இந்தக் கூட்டணி உள்ளது'' என்று அரசியல் நிபுணரும், ஜெயின் பல்கலைக்கழக துணை வேந்தருமான டாக்டர் சந்தீப் சாஸ்திரி, பி.பி.சி. இந்தி -க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவுட்லுக் சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியரான கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: ``கர்நாடகாவில் மோசமான நிலையில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு, பெல்லாரியில் கிடைத்திருக்கும் வெற்றி, சரியான நேரத்தில் கிடைத்திருக்கும் பரிசாக அமைந்துள்ளது. பாஜக வலுவாக உள்ள இடத்தில் கிடைத்திருக்கும் இந்த வெற்றி, சரியான வகையில் கணக்கு போட்டு செயல்பட்டால், பெரிய மத்திய பிரபலங்கள் யாரும் இல்லாவிட்டாலும்கூட, மோடி - அமித்ஷா கூட்டணியை தோற்கடிக்க முடியும் என்ற வலுவான தகவலைத் தெரிவிப்பதாக உள்ளது.''

Presentational grey line
Presentational grey line

டாக்டர் சாஸ்திரி கூறியதாவது : ``காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஒரு முக்கிய விஷயத்தையும் தெரிவிக்கிறது. அடிமட்ட அளவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றையெல்லாம் தாண்டி செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜகவுக்குள் கோஷ்டி மோதல் வெளிப்படத் தொடங்கியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது. எடியூரப்பாவின் தொகுதியைத் தவிர, வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இது கோஷ்டி மோதலின் விளைவுதான்.''

பாஜக அரசில் முன்னாள் சட்டத் துறை அமைச்சரான சுரேஷ்குமார் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ``நேர்மையான சுயபரிசோதனைக்கான நேரம் வந்துவிட்டது'' என்று கூறும் அளவுக்கு வந்துவிட்டது. கட்சி வட்டாரத்தில் இந்தக் கருத்துக்கு ஆதரவு கிடைத்திருப்பதைப் போல தெரிகிறது.

முன்னாள் எம்.எல்.சி.யும், சமீபத்தில் கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியவருமான பானு பிரகாஷ் கூறியதாவது: ``எப்போதும் நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியலில் நாம் வளர முடியும். நாம் செய்பவை எல்லாம் எப்போதுமே சரியாக இருக்கும் என்றும், மற்றவர்கள் கூறுவதெல்லாம் தவறாக இருக்கும் என்றும் நினைப்பது எப்போதும் சரியாக இருக்காது. நமது மாநிலத்தில் கட்சித் தலைமை பிரச்சனை பற்றி, நமது கட்சியின் மத்தியத் தலைமை சிந்திக்க வேண்டும்.''

பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

பிரகாஷின் கருத்து, பாஜகவுக்குள் உள்ள எடியூரப்பாவுக்கு எதிரானவர்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. எடியூரப்பாவை Margadarshak Dal-க்கு அனுப்ப வேண்டும் என்று, அவருடைய எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். எடியூரப்பாவை நீக்கினால், லிங்காயத் வாக்குகளை கட்சி இழந்துவிடும் என்ற அச்சம் காரணமாக, இந்தக் கோரிக்கையை கட்சித் தலைவர் அமித்ஷா உறுதியுடன் எதிர்த்து வருகிறார்.

ஆனால், லிங்காயத்துகள் ஆதிக்கம் செலுத்தும் ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், காங்கிரஸ் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். பாலம் கட்டிக் கொடுத்த ஹீரோ என்று அழைக்கப்படும், தனது தந்தை சித்து நியமகவுடா காலமானதால், காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியமகவுடாவுக்கு அனுதாப வாக்குகள் கிடைத்தன என்பதும் முதலாவது காரணம்.

பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் வாக்கு வங்கியான அகிண்டா சமூகத்தவர்கள் (சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்கள்) ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது இரண்டாவது காரணம். பாஜகவுக்குள் உள்ள கோஷ்டிமோதலும், லிங்காயத் மக்களின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்ததும் மூன்றாவது காரணம். சொல்லப் போனால், சமூகத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் தான், லிங்காயத் சமூகத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று தாம் முயற்சி செய்ததாக முன்னாள் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவுக்கு லிங்காயத் மக்களின் கணிசமான வாக்குகள் உள்ள இரண்டாவது முக்கிய தொகுதியாக பெல்லாரி (பழங்குடியினர்) தொகுதி உள்ளது. சுரங்கத் தொழிலதிபரும், பாஜக தலைவருமான ஜனார்த்தன ரெட்டியின் சட்டவிரோத இரும்புத் தாது சுரங்கத் தொழிலால் ஏற்பட்ட கெட்ட பெயர் காரணமாக ``பெல்லாரி குடியரசு'' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட மாவட்டத்தில் இந்தத் தொகுதி உள்ளது.

பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து: ``பெல்லாரியின் வெற்றிக்கான பெருமை டி.கே. சிவக்குமாருக்கு (நீர்வளத் துறை அமைச்சர்) தான் சேரும் என்பது தெளிவான விஷயம். ஒரு குழுவில் இணைந்து அவர் நன்றாக செயல்பட்டார். அவரைப் போன்ற ஒருவர் எங்களுக்குத் தேவை. ஏதோ காரணத்தால், எங்கள் கட்சித் தொண்டர்கள் போதிய உற்சாகத்துடன் இல்லை. வருங்கால முதல்வர் என்று பி. ஸ்ரீராமுலு பெயரை முன்மொழிந்தது தவறு. சுரங்கத் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதைக் கண்டு மக்கள் வெறுத்துவிட்டார்கள்.''

அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியினர் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறியதாவது: ``பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வார்த்தைகள் மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பட்டினியைப் போக்கவும் உதவவில்லை. இதுதான் நிலைமை. மாற்று அணியின் மைய சக்தியாக காங்கிரஸ் இல்லாமல் போனாலும், காங்கிரஸ் கட்சியை அடிப்படையாகக் கொண்ட, பாஜகவுக்கு எதிரான கூட்டணிகளை மக்கள் விரும்புவார்கள்.''

மாண்டியா மக்களவைத் தொகுதி மற்றும் ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றிருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். தெற்கு கர்நாடகாவில் கடந்த காலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தான் பிரதான போட்டி கட்சிகளாக இருந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :