எம்.ஜே. அக்பர் ராஜிநாமா: பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகியுள்ளார். இதனை டிடி நியூஸ் செய்தி முகமை உறுதிபடுத்தியுள்ளது.

எம்.ஜே. அக்பர் ராஜிநாமா

பட மூலாதாரம், Getty Images

தன் மீதுதவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தான் நீதிமன்றத்தில் நியாயம் கோரவுள்ளதாகவும் எம்.ஜே. அக்பர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து தான் ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் பணியாற்றவும், நாட்டுக்கு சேவை செய்யவும் தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நன்றி கூறுவதாகவும் எம்.ஜே. அக்பர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எம்.ஜே. அக்பரின் பதவி விலகல் குறித்து அவர் மீது குற்றம் சுமத்திய பத்திரிகையாளர் ப்ரியா ரமணி தனது ட்விட்டரில் குறிப்பிடுகையில் , 'எம்.ஜே. அக்பரின் ராஜிநாமா செய்தியால் பெண்ணாக தனது குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது போல் உணர்வதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்கும் நாளைதான் எதிர்நோக்குவதாகவும்' தெரிவித்தார்.

எம்.ஜே. அக்பர் ராஜிநாமா: பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி

பட மூலாதாரம், TWITTER

முன்னதாக, வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என #MeToo ஹாஷ்டாகின் கீழ் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது

பெண்களை 'சந்திப்பு' என்ற பேரில் விடுதிகளுக்கு அழைத்தது உட்பட மோசமான நடத்தை குற்றச்சாட்டு அக்பர் மீது எழுந்தது.

தன் மீது குற்றம் சுமத்திய மற்றொரு பெண் மீது நஷ்ட ஈடு கோரப்போவதாகவும் அக்பர் தெரிவித்தார்.

அக்பர் மீது குற்றம் சுமத்திய ஷுதாபா பால் இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "இதுகுறித்து நான் யோசித்து வருகிறேன். உண்மையும் நீதியும் நிச்சயம் வெல்லும். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்."

"புகார் கூறிய எங்களை அவமரியாதை செய்வதே அக்பர் தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கு ஒரு உதாரணம்."

"எங்களது போராட்டம் அனைத்து பெண்களுக்குமானது; நீதிக்கானது, அன்றாட வாழ்க்கையில் பணியிடங்களில் நடக்கின்ற வன்முறைக்கு எதிரானது." என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: