கருணாநிதி உடல்நிலை : நலம் விசாரித்தார் ஆந்திர முதல்வர்

காவேரி மருத்துவமனையில் ஆறாவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு நேரில் வந்து விசாரித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை முற்பகல் காவேரி மருத்துவமனைக்கு வந்து சந்திரபாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.

கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதி உடல்நலம் பெற செபிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு அரசியல் மற்றும் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இன்றைய வருகை சமீபத்திய ஒன்றாகும்.

கடந்த வியாழக்கிழமை காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

மேலும் கருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை காவேரி மருத்துவமனை வந்த நடிகர் கவுண்டமணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :