எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் - ரஜினிகாந்த்
"ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர்; சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்த பிறகுதான் பிரச்சனை தொடங்கியது" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
மேலும்,''நான் எல்லோரையும் பார்த்தேன். சில குடும்பங்களை மட்டுமே பார்க்கமுடியவில்லை. நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள்.
இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது. கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது'' என்றார்.
''போராட்டம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட வெற்றி கிடைத்தாலும் ரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது''
''இந்த சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.அவ்விதத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன். விஷக்கிருமிகளை மற்றும் சமூக விரோதிகளை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார். இவ்விஷயத்தில் ஜெயலலிதாவை இப்போதைய அரசு பின்பற்றவேண்டும்.இல்லையெனில் மிகவும் ஆபத்தாகும்''
''அரசாங்கம் ஸ்டெர்லைட்டை மூடிய பிறகு அந்நிறுவனம் நீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது.நீதிமன்றத்தில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அங்கே ஸ்டெர்லைட் வெற்றி பெறாது; வெற்றி பெறவும் கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.
பேட்டியின் போது தமிழ்நாட்டில் போராட்ட பூமியாக இருந்தால் அதன்பிறகு எந்த தொழிலும் இங்கு வராது.எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பு கிடைக்காது. இளைஞர்கள் கஷ்டப்படுவார்கள். ஏற்கனவே விவாசாயிகளுக்கு தண்ணீர் இல்லை. ஜாக்கிரதையாக போராட்டம் செய்ய வேண்டும்.
''அரசாங்கம் கூட தொழிற்சாலைகளுக்கு உரிய விதிமுறைகளை பார்த்து முறையாக சரியான முறையில் அனுமதி தர வேண்டும். தொழிற்சாலைகளால் ஏதாவது நடந்தால் கூட நீதிமன்றத்தை அணுகி தான் பிரச்சனையை சரிசெய்ய முடியும். போராட்டம் போராட்டம் என்றால் கஷ்டமாகிவிடும்''
''சமூகவிரோதிகள் உள்ளே நுழைவதை கணிக்கத் தவறியது உளவுத்துறையின் தவறு. நடந்தது நடந்துவிட்டது. நடக்கப்போவது நல்லதாக நடக்கட்டும்''
''திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சட்டமன்றத்தை நடத்தவிடாமல் போராட்டம் செய்கிறார்களே என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த ரஜினி '' எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும்போது அவர்கள் நியாயத்தை காட்டுவார்கள்'' என்றார்.

பட மூலாதாரம், VEDANTA
''13 பேர் இறந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளதே என ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது '' மிகவும் குழப்பமாக இருக்கிறது. நான் ஏற்கனவே கூறியபடி காவலர் உடையில் இருப்பவர்கள் மீது கைவைப்பவர்களை விடக்கூடாது. வீடியோ கேமரா பதிவுகள், உளவுத்துறை அறிக்கைகள் உள்ளன. அதைப்பார்த்து யார்யார் காவலர்களை அடித்துள்ளனர்? யார் பொதுச் சொத்தை சேதப்படுத்தினர் என்பதை கண்டுபிடித்து அவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடவேண்டும். சமூக விரோதிகள் என அடையாளப்படுத்தவேண்டும்'' என்றார்.
''எல்லாத்துக்கும் முதல்வரை ராஜினாமா செய்யச்சொல்லி கேட்கும் அரசியலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. பெரிய தவறுகள் நடக்காமல் முதல்வர் ஜாக்கிரையாக செயல்பட வேண்டும்''
பின்பு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில், சமூக விரோதிகள் போராட்டத்தில் நுழைந்தாக கூறியது பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களுக்கு ஆவேசமாக பதலளித்தார்.
"ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர்"
"சமூக விரோதிகள் காவல்துறையை அடித்த பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், சீருடையில் இருக்கும் போலிஸாரை யார் அடித்தாலும் தவறே என்று கூறிய அவர், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறும் என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












