You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அட்சய திருதியையின் போது தங்கம் வாங்குவது லாபமா? நஷ்டமா?
உலகில் அதிகளவு தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதுவும்,தங்கம் வாங்குவதற்கு நல்ல நாளாக கருதப்படும் அட்சய திருதியை வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். கடந்த வாரத்தில் இருந்தது போல தங்கத்தில் விலை உயர்ந்துகொண்டே இருந்தால், இந்த ஆண்டு விலை உயர்ந்த அட்சய திருதியையாக இருக்கலாம்.
ஏப்ரல் 11-ம் தேதி 24 கேரட் தங்கத்தின் விலை உயர்ந்து 31,524 ரூபாயாக இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், தங்கம் இன்னும் அதிகம் விற்பனையாகும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
''பணக்கொள்கை தொடர்பான நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, மேற்கத்திய பொருளாதாரத்தில் பணவீக்கம் உயரும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமானது. மார்ச் 2018-ன் இறுதியில் உலகளாவிய தங்க வர்த்தகத்தில் 1450 டாலராக இருந்ததைப் பார்த்தோம். மார்ச் 2019க்கு முன்பு இது 1600 டாலராக எட்டலாம்.'' என்கிறார் நிர்மல் பேங் நிறுவனத்தின் பொருட்கள் & நாணயங்கள் ஆராய்ச்சியின் தலைவர் குனல் ஷா.
தங்கத்தின் விலை ஏன் உயர்கிறது?
தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. சீனாவுடன் வர்த்தக யுத்தம் என்ற அமெரிக்க எச்சரிக்க, சிரியாவில் பதற்றம் என இந்த ஆண்டு உலகளவில் ஒரு நிச்சயமற்ற ஆண்டாக உள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா என்பதில் எச்சரிக்கையாக உள்ளனர். முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியதால், உலகளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளிலும் எதிரோலித்தது.
இந்தியாவில் தேவை எப்படி உள்ளது.
2016 ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் தங்கத்தின் விற்பனை குறைந்தது. இதனால் தங்கத்தின் இறக்குமதி 40% குறைந்தது. ஆனாலும், தற்போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கைகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவ மழையானது, விவசாயிகளுக்கு வருமானத்தை உயர்த்த உதவியது. இது இந்த பண்டிகை காலங்களில் அவர்கள் அதிக தங்கம் வாங்க வழிவகுக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் அட்சய திருதியின் போது தங்கத்தின் விலை எவ்வளவாக இருந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால், இந்த ஆண்டு தங்கத்தின் விலை எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை கணிக்கலாம். 2010ம் ஆண்டு அட்சய திருதியின் போது 10 கிராம் 24 கேரட் தங்கத்தை 18,167 ரூபாய்க்கு வாங்கியிருக்கலாம். ஆனால், கடந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கத்தின் விலை 29,860 ரூபாயாக இருந்தது.
தங்கத்தை வாங்குவதற்கு இது நல்ல நேரம் தானா?
நிபுணர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. '' இந்த ஆண்டின் இறுதியில் தங்கத்தில் மேலும் அதிகரிக்கும் என்பது எனது பார்வை. எனவே இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கத்தை வாங்குவது நல்லக்து.'' என்கிறார் காம்ட்ரென்ஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன்.
'' இப்போது வர்த்தக சூழ்நிலை வேறுபட்டதாக உள்ளது. எனவே சில மாதங்கள் காத்திருந்து, செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் தங்கத்தை வாங்கலாம் என்பது எனது ஆலோசனை'' என்கிறார் எஸ்.எம்.சி குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வந்தனா பாரதி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்