ராமராஜ்ய ரத யாத்திரை: கமல், ரஜினி சொல்வது என்ன?

தமிழகத்தில் நுழைந்துள்ள ராமராஜ்ய ரத யாத்திரை, அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

இந்த ரத யாத்திரை மதக் கலவரத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நுழைந்துள்ள ராமராஜ்ய ரத யாத்திரை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி" என்று கூறியுள்ளார்.

மேலும், "மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு" என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், தன்னுடைய இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "தமிழகம் மதச்சார்பற்ற நாடு, இங்கு மதக்கலவரம் எந்த விதத்தில் வந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டும். மதநல்லிணக்கத்தை காவல்துறை பாதுகாக்க வேண்டும். அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறினார்.

மேலும், இந்த ரத யாத்திரை, "மதக்கலவரத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது" என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்றும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: