நாளிதழ்களில் இன்று: கடன் வாங்கிக்கொண்டு தப்புவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய புதிய சட்டம்?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீரவ் மோதி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்கள் பொதுத்துறை வங்கிகளிடம் பெரும் அளவில் கடன் பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டே தப்பியோடும் நிலையில், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. கண்காணிப்பு அமைப்புகளும் மறுசீரமைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

தி இந்து - ஆங்கிலம்

நடக்கும் 2017-18ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2%ஆக உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும் முந்தைய கணிப்பான 6.5% எனும் அளவைவிட சற்று அதிகமாக 6.6% என்று கணிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

மரபுவழி நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களின் சரத்துகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று டெல்லி மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

உடல் நலத்துடன் இருக்கவும், சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 கொடுத்துள்ள அங்கீகாரத்தை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துவதால், இது ஒரு முக்கியமான தீர்ப்பு என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி

அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கில், அதைப் பரிசீலனை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினர், கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அரசுப் பணியில் சேர்வதற்கான வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :