ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை
நடிகை ஸ்ரீதேவியின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர் பிறந்த சொந்த ஊரான மீனம்பட்டி கிராம மக்கள்.

பட மூலாதாரம், TWITTER @SRIDEVIBKAPOOR
ஐயப்பன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஸ்ரீதேவி. சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோது ராஜேஸ்வரியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஐயப்பன்.
பணி நிமித்தம் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் குடும்ப நிகழச்சி, ஊர்த் திருவிழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க மட்டுமே அவரது குடும்பத்தினர் சொந்த ஊரான மீனம்பட்டிக்கு வந்து சென்றுள்ளனர்.
கருவுற்ற நிலையில் சொந்த ஊரான மீனம்பட்டிக்கு வந்த ராஜேஸ்வரி 1963 ஆகஸ்ட் 13 ம் தேதி ஸ்ரீதேவியைப் பெற்றெடுத்தார்.

பட மூலாதாரம், TWITTER @SRIDEVIBKAPOOR
அவர் பிறந்த சில மாதங்களிலேயே ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் குழந்தையுடன் சென்னை திரும்பினர்.
சிறு வயது முதலே நாடகம், நடனம், பாடல் என பல்வேறு கலைகளில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, நான்கு வயதில் தனது சினிமா வாழ்கையை தொடக்கினார். சுறுசுறுப்பும், சக மனிதர்களுடன் இயல்பாக பழகும் ஆற்றலும் சிறு வயது முதலே அவரது பண்புகள் என்று பெருமை கொள்கிறார்கள் மீனம்பட்டி மக்கள்.
மீனம்பட்டி மக்கள் ஸ்ரீதேவியை அடிக்கடி நேரில் சந்தித்ததில்லை. ஆனால், எப்போதாவது வரும்பொழுது அவருடன் அனைவரும் மிகுந்த அன்புடனும் பழகியுள்ளனர். பல ஆண்டுகள் கழித்து பார்த்தால் கூட ஏற்கனவே பழகிய நினைவை சட்டென்று நினைவு கூர்ந்து பேசும் தன்மை கொண்டவர் ஸ்ரீதேவி எனவும் புகழாரம் சூட்டுகின்றனர் கிராம மக்கள்.
அவரது இழப்பு சினிமா துறைக்கு எவ்வளவு ஈடுகட்ட முடியாத இழப்பாக உள்ளதோ அதைவிட பல மடங்கு கிராமத்திலும் அவரது இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகவே உள்ளதாகவும் அவரது மறைவு தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிகின்றனர் கிராம மக்கள்.

பட மூலாதாரம், E.Gnanam
தனது இளம் வயதில் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் 1996ம் ஆண்டு தாய் ராஜேஸ்வரி புற்று நோயாலும் மரணமடைந்தனர். அதன் பிறகே ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார்.
1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் போட்டியிட்டார் ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். அப்போது, தனது தந்தையுடன் ஒரு வார காலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்ரீதேவி.
அதன்பிறகு, இதுவரை சொந்த ஊருக்கு நடிகை ஸ்ரீதேவி வரவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரது பெற்றோரின் இறப்புக்குப் பின்னர் வர இயலாத சூழ்நிலையால் நீண்ட நாட்களாக சொந்த ஊரையே பார்க்காமல் அவர் இறந்துவிட்டதாகவும் வேதனை தெரிவிகின்றனர்.
1989 தேர்தலில் அவரது தந்தை தோல்வியடைந்தாலும் முன்னதாக அவரது பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக 10 ஆண்டுகளும், அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக 20 ஆண்டுகளும் இருந்துள்ளார்.

பட மூலாதாரம், E.Gnanam
அவரது தங்கை லதாவின் கணவரான சஞ்சய் ராமசாமி 1991ல் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது தந்தையும் பெரியப்பா ராமசாமியும் இணைந்து மீனம்பட்டி கிராமத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் வகையில் பாரதி துவக்கப்பள்ளி துவக்கினர். அப்பள்ளி இன்று வரை செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் அவரது உறவினர் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சதிஷ் மற்றும் ஆனந்தன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். சதிஷ் இறந்த விட்டார். தற்போது ஆனந்தன் மட்டும் சிவகாசியிலேயே வசித்து வருகிறார்.

அவரது தந்தையின் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியுடன் எவ்வித தொடர்பிலும் இல்லாமலே இருந்துள்ளனர்.
இதுகுறித்து மீனம்பட்டியை சேர்ந்த கந்தன் என்பவர் கூறுகையில், "நடிகை ஸ்ரீதேவி இந்த ஊரில் பிறந்திருந்தாலும்கூட ஊருக்கு வருவது, உறவினர்களை சந்திப்பது இல்லை. சிறு வயதில் திருவிழா, சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவரும், குடும்பத்தினரும் வருவர். 1989 சட்டமன்ற தேர்தலில் அவரது தந்தை போட்டியிட்ட போது ஒரு வார காலம் இங்கே தங்கியிருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தான் நாங்கள் அவரை பார்த்தது. 1990ல் அவரது தந்தை இறப்பிற்கு பிறகு வந்ததே இல்லை. அவர் வந்தால் தங்கும் வீட்டை ஆனந்தன் எனும் அவரது உறவினர் பராமரித்து வருகிறார்", என்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














