இந்தியாவுக்கு வருகை புரிந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?
- எழுதியவர், ஆயிஷா பெரேரா
- பதவி, பிபிசி
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images
தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.
அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோதி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.
மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.
ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோதி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.
பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

பட மூலாதாரம், EPA
ஒரு கீழ்நிலையுள்ள அமைச்சரை ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க அனுப்பிவைத்தது நிச்சயமாக அவரை அவமதிக்கும் செயல் என்று பிபிசியிடம் கூறினார் பொருளாதார வல்லுனரும், பத்தி எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா.
"இந்திய மாநிலமான பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்துடன் ட்ரூடோவின் அரசில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்புடன் இருப்பதே காரணம்,"என்று அவர் கூறுகிறார்.
கனடாவில் வாழும் சீக்கியர்கள் ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1985இல் 329 பேர் கொல்லப்பட்ட கனடாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட அதிகாரிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சீக்கியர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
'காலிஸ்தான் ஆதரவாளர்' என்று காரணம் கூறி, ஏப்ரல் 2016-இல் இந்தியா வந்த கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்-ஐ பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Reuters
கனடா பிரதமர் இந்தியா வந்தபோது அவமானப்படுத்தப்படவில்லை என்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
"மத்திய அமைச்சரவையின் ஓர் உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது," என்கிறார் அவர்.
"காலிஸ்தான் குறித்த இந்தியாவின் கவலைகளை கனடாவின் உயர் நிலையில் இருப்பவர்களிடம் எழுப்பாமல், ட்ரூடோவின் வருகையை, காலிஸ்தான் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து முன்முடிவுடன் அணுகக்கூடாது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவு அதிகாரி கன்வல் சிபல்.
"உள்நாட்டு அரசியல் காரணங்களால் காலிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. எனினும், ட்ரூடோவின் இந்தப் பயணத்தை கனடா செயல்படுவதற்கான உத்தரவாதம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் அவர்.

பட மூலாதாரம், AFP/Getty Images
ஜஸ்டின் ட்ரூடோ அவமானப்படுத்தப்படவில்லை என்று கருதும் சிபல் சமீபத்தில் இரு நாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.
இந்தியாவுக்கு அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் அளிக்க 2015இல் கனடா உடன்படிக்கை செய்துகொண்டது இருநாட்டு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்பட்டது.
கீழ்நிலை அமைச்சர் ஒருவர் வரவேற்க அனுப்பப்பட்டது பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறும் சிபல், "ஓர் அரசுமுறைப் பயணத்தை சீர்குலைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருநாட்டு நலன் கருதி அதை வெற்றியடையச் செய்யவே விரும்புவார்கள்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












