இன்று தீர்ப்பு வெளியான 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், CHANDAN KHANNA
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு, அந்த விவகாரத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனையை சட்டவிரோதம் எனக் கூறி மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு ஆகியவற்றின் தீர்ப்பை இன்று (டிசம்பர் 21) டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அளித்தது.
2007-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் முக்கிய நாட்களை விவரிக்கும் சுருக்கம் இது.
2007
மே 16 - தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்பு
ஆகஸ்ட் - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறை தொடங்கியது.
செப்டம்பர் 25 - உரிமத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 1 என அறிவிப்பு
அக்டோபர் 1 - 46 நிறுவனங்களிடம் இருந்து 575 விண்ணப்பங்கள் வருகை
நவம்பர் 2 - வெளிப்படையாக உரிமம் ஒதுக்குமாறு ஆ.ராசாவுக்கு பிரதமர் கடிதம்
2008
ஜனவரி 10 - முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிமம் வழங்க முடிவு
ஜனவரி 10 - விண்ணப்ப கடைசி நாளை செப்டம்பர் 25-ஆக இறுதி செய்தது தொலைத்தொடர்புத் துறை
செப்டம்பர் 22 - ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலிசர்வீசஸ் அவற்றின் பங்குகளை எடிசலாட், டெலிநார், டோகோமோ நிறுவனங்களுக்கு முறையே அதிக விலையில் விற்றன.

பட மூலாதாரம், Getty Images
2009
மே 4 - வாட்ச்டாக் என்ற என்ஜிஓ மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) புகார் மனு
ஜூலை 1 - விண்ணப்ப கடைசி நாள் முன்கூட்டியே நிர்ணயித்ததை நிறுத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்
அக்டோபர் 12 - சிபிஐ விசாரிக்க சிவிசி பரிந்துரை
அக்டோபர் 21 - பெயர் குறிப்பிடாத தொலைத்தொடர்புத் துறை, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு
அக்டோபர் 22 - மத்திய தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் சிபிஐ சோதனை
நவம்பர் 16 - 2ஜி உரிமம் வழங்கியதில் இடைத்தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கு இருக்கும் தொடர்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வருமான வரித்துறைக்கு சிபிஐ கடிதம்
நவம்பர் 20 - நீரா ராடியாவும் ஆ.ராசாவும் முக்கிய கொள்கை விவகாரங்களை விவாதித்தது வருமான வரித் துறை பதிவு செய்த தொலைபேசி உரையாடலில் அம்பலம்.
2010
மே 6 - ஆ.ராசாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கசிவு
செப்டம்பர் 24 - ராசாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமருக்கு உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு
நவம்பர் 14 - அமைச்சர் பதவியில் இருந்து ஆ. ராசா ராஜிநாமா
நவம்பர் 16 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை

பட மூலாதாரம், Getty Images
2011
பிப்ரவரி 2 - ஆ.ராசா, அவரது தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, அவரது பதவிக்காலத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலாளராக இருந்த சித்தார்த் பெஹுரா கைது
பிப்ரவரி 17 - ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல்
மார்ச் 14 - 2ஜி வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ஏப்ரல் 2 - ராசா, சந்தோலியா, சித்தார்த் பெஹுரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி, துணைத் தலைவர் ஹரி நாயர், குழும தலைவர் சுரேந்திர பிபாரா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு
ஏப்ரல் 25 - திமுக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, அவரது தாயார் தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட நால்வர் பெயர் துணை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு
அக்டோபர் 24 - குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு
நவம்பர் 11 - சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது
நவம்பர் 23 - கார்பரேட் நிர்வாகிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா ஆகியோரை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நவம்பர் 28 - கனிமொழி, சரத் குமார், கரீம் மொரானி, ஆசிஃப் பால்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோரை பிணையில் விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
நவம்பர் 29 - ஷாஹித் பால்வாவை பிணையில் விடுவிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
டிசம்பர் 1 - சந்தோலியாவை பிணையில் விடுவிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
டிசம்பர் 12 - சிபிஐ தாக்கல் செய்த மற்றொரு குற்றப்பத்திரிகையில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் அன்ஷுமன் ருய்யா, ரவி ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி. கெய்தான், லூப் டெலிகாம், லூப் மொபைல் இந்தியா, எஸ்ஸார் டெலி ஹோல்டிங் பெயர்கள் சேர்ப்பு
2012
பிப்ரவரி 2 - 2ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
பிப்ரவரி 2 - ப.சிதம்பரத்தை விசாரிக்க மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கை மீது சிபிஐ நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் யோசனை
பிப்ரவரி 4 - ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்க சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்
பிப்ரவரி 23 - சிபிஐ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி, சிபிஐஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு
மே 12 - ராசா பிணையில் விடுதலை
ஆகஸ்ட் 24 - 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க விடுத்த கோரிக்கையில் முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
2013
டிசம்பர் 9 - மக்களவையில் 2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல்
2014
ஏப்ரல் 25 - ராசா, கனிமொழி உள்ளிட்ட 10 பேர், 9 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
மே 5 - நீதிமன்றத்தில் ராசாவின் சாட்சியம் பதிவு
அக்டோபர் 31 - அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு
நவம்பர் 10 - இறுதி விசாரணை டிசம்பர் 19 முதல் தொடங்கும் என்றது சிபிஐ நீதிமன்றம்
2015
நவம்பர் 3 - குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய கனிமொழி மனு நிராகரிப்பு
2017
ஏப்ரல் 19 - வழக்கு விசாரணை முடிந்து வாதங்கள் நிறைவு
டிசம்பர் 5 - வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 21 வெளியிடுவதாக சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு
டிசம்பர் 21: வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












