You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நவீன வளர்ச்சியில் மனிதநேயம் மறக்கப்படுகிறதா? மக்களின் உணர்வுகள்
விண்வெளியில் சாதிக்கும் இந்தியா ஆழ்துளையில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்ற தவறுகிறது என்று சமீபத்தில் வெளியான 'அறம்' திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இது வளர்ச்சியுடன் எதிர்பாராத ஒரு விபத்தை ஒப்பிடுவது சரியா? அரசுக்கு யதார்த்த நிலையை எடுத்துக்கூறுவதாக இது அமைகிறதா? என்று பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளில் தேர்ந்துடுக்கப்பட்டவற்றை இங்கு பதிவு செய்கிறோம்.
"விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதையும் மீறி விபத்துக்கள் ஏற்பட்டால் அதனுடைய பாதிப்பை குறைக்க போதிய உபகரணங்கள் இல்லாதது வளர்ச்சியின்மையே" என்கிறார் அபு நதீரா.
மசனம் குமாரனின் கருத்து இவ்வாறாக உள்ளது, "ஆழ்துளை தோண்டுவதற்கே இங்கே இன்னும் முறையான சட்டம் இல்லை ,மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை, ஆனால் உயிர்களை காப்பாற்ற கருவிகள் அவசியமாகிறது தற்கால சூழ்நிலைக்கு"
"விபத்து என்பதே எதிர்பாராதது தானே , செயற்கைகோள் ஏவுவதிலே சிறிய விபத்து நேர்ந்தால் மறுமுறை சரிசெய்ய அக்கறை காட்டும் அரசு, பல குழந்தைகள் பலியான போதும் அதற்கான தீர்வை தர மறுப்பது ஏன், இங்கே உயிர்களுக்கு என்ன மதிப்பு?" - இது எஸ் ராஜமூர்த்தியின் கருத்து.
"இது சினிமாக்காரன்களுடைய டயலாக் ...இதை ஒரு விவாதப் பொருளாக மாற்ற ஊடகங்கள் முயல்வது தான் வேதனை...அரசை குறை கூறினால் படம் பிரபலமாகும் ..அதுதானே திரை உலகம் தற்போது பின்பற்றும் பாணி ...குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பின்மையை குறிப்பிடலாமே அல்லது அதற்கான விழிப்புணர்வை முன் வைக்கலாமே ...படம் ஓடாது ..ஒட்டு மொத்தமா ..வரி விலக்கு வேண்டும் அது தான் உங்களது அஜெண்டா...
நடிகர்களுக்கு வழங்கும் சம்பளத்தை குறைக்க முயன்று பாருங்கள்" என்கிறார் பச்சையப்பன் ஞானசுந்தரம்.
தினேஷ் இவ்வாறாக பதிவிட்டுள்ளார், "ஊழல்லற்ற நிர்வாகத்தின் வெற்றி யே இஸ்ரோவின் பிரமாண்ட வளர்ச்சி.ஊழலின் ஊற்றுக்கண் உள்ளாட்சி நிர்வாகம்.இதற்கு காரணம் ஊழல் நிர்வாகம்.இஸ்ரோவை குறைகூறுவோர் அந்நிய அடிப்படை அறிவற்ற மூடர் கூடம்."
"வளர்ச்சி என்பது நாட்டு மக்களை கொன்று அதன் மேலே ஏறி நிற்பது அல்ல. மாறாக மக்களை காத்து அவர்களையும் கூடகூட்டிக்கொண்டு ஏறுவது." என்கிறார் ஜெயபிரகாஷ்.
புலிவலம் பாஷாவின் கருத்து இது : "ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது விஞ்ஞான வளர்ச்சி மட்டும் போதாது ,ஒரு சாரண மனிதனின் வாழ்க்கை கடன் இல்லாமல் வாழ்வதில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது"
சக்தி சரவணன் சொல்கிறார், "விண்வெளி, அறிவியல், அணு ஆயுதம் தொடர்பான கண்டுபிடிப்புகள் ஒரு நாட்டைப் பெருமை அடையச் செய்யும். மருத்துவ துறையில் ஓர் உயிரைக் காப்பதற்கான கண்டுபிடிப்புகள் இவ்வுலகையே உயர்வு அடையச் செய்யும். வானூர்தி, செயற்கைக்கோள், அணு ஆயுத ஏவுகணை என தன்னுடைய எண்ணற்ற படைப்புகளால் இவ்வுலகையே திரும்பி பார்க்கச் செய்த மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு மனநிறைவு கொடுத்த கண்டுபிடிப்பாக அவர் கருதியது எண்ணவோ, ஊனமுற்றோர்க்கான எடைக் குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய மருத்துவத்தில் பயன்படும் எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி போன்றவையே ஆகும்."
"உண்மை தான். ஆனால் ஆழ்துளை கிணறு துளைக்கும் முன் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்பது அதன் உரிமையாளரின் பொறுப்பு என்பதை யாரும் உணர்ந்து செயல்படுவதில்லை. முதலில் தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும்." என்பது மு.மோகனின் கருத்து.
அனந்த் பாபு இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், "வளர்ச்சியா ??!! இந்தியாவில் கலப்பிடம் இல்லா உணவு ,உடுக்க உடை,இருக்க இருப்பிடம், நல்ல கல்வி, தரமான மருத்துவம் இவை அனைவருக்கும் கிடைக்க செய்வதே வளர்ச்சி ... நடுத்தர வர்கத்திற்கும் மேல் இருக்கும் மக்களுக்காகவே இந்த அரசு இயங்குகிறது ...கீழ்த்தட்டு மக்களை மறந்து போயாச்சி.... விண்வெளி வளர்ச்சி அல்ல .. நாம் இருக்கும் மண்வளத்தை வளமானதாக மாற்றுவதே வளர்ச்சி."
அக்பர் சொல்கிறார், "விஞ்ஞானம், விளையாட்டு,ஆயுதம் இவை மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானித்து விடாது. குடிமக்களின் அடிப்படை தேவையும் அத்தியாவசியங்களான உணவு,உடை, இருப்பிடம்,தரமான இலவச கல்வி,வளமான மேலாண்மை இவற்றோடு இணைந்த சிறப்பான இலவச மருத்துவம், பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற ஏனைய தேவைகள் பூர்த்தி அடைவதும் அவசியம்.தனி மனித வருமானம் நாட்டு வருமானத்தை அதிகரிப்பது போல தனிமனித தன்னிறைவு, பாதுகாப்பான முன்னேற்றம் இவையே நாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும்"
"இந்த பிரச்னை இங்கு ஒரு தசாப்தமாக உள்ளது. பல உயிர்கள் பலியாகி உள்ளன. அரசாங்கம் இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் ஏனெனில் இது தவிர்க்க முடியாத பிரச்சனை. மக்கள் கவனகுறைவாக இருக்கிறார்கள். ஆனால், நம் அமைப்பு இந்த விபத்துகளை தவிர்ப்பதற்காக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டங்கள் இருக்கிறது. ஆனால், அதை அமல்படுத்துவதில்லை. இது வெறும் விபத்தல்ல. சாதரண குடிமகன் தொடங்கி, அதிகார வர்க்கம் வரை பல்வேறு தரப்பினரின் அலட்சியத்தால் ஏற்பட்ட ஒன்று." என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் மாதவன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்