மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி

சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்புகளுக்குப் பதில்சொல்லும் வகையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள், மாநில, தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள் ஆகியவை தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

'ஜோசப் விஜய்' என்று பெயர் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்.

ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்