தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தாரா அமித் ஷா மகன்?

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. நரேந்திர மோதிக்கு பின் அமித் ஷாதான் பா.ஜ.கவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதராக கருதப்படுகிறார். ஆனால், ஜெய் ஷா வேறொரு காரணத்திற்காக செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்.

நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற பின், ஜெய் ஷாவின் நிறுவனம் பலமடங்கு வளர்ச்சி அடைந்ததாக குற்றஞ்சாட்டி சமீபத்தில் `thewire.com` இணையதளம் ஒரு செய்தி வெளியிட்டது.

தாங்கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுப்படவில்லை என்று மறுத்த ஜெய் ஷா, அந்த இணையதளத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்ற நாட்கள்

அது 2010-ம் ஆண்டு, இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி உடன் ஒரு 20 வயது இளைஞர் குஜராத் உயர் நீதி மன்றத்திற்கு வருவார். நீதிமன்றத்தில் வழக்கு குறித்த வாதங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, அந்த இளைஞர் வழக்கறிஞர்களுக்கு பின் வரிசையில் அமர்ந்து இருப்பார்.

ஒரு பக்கம் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு குறித்த தனது வாதங்களை எடுத்து வைப்பார். இன்னொரு பக்கம், வழக்கறிஞர் கே.டி.எஸ் துளசி, எதிர்வாதங்களை எடுத்து வைப்பார்.

இந்த இளைஞர் வழக்கறிஞர்களின் வாதங்களில் கவனம் செலுத்துவதை விட மிகக் கூர்மையாக நீதிபதியின் முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருப்பார். வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போது, ஹனுமன் மந்திரங்களை உரக்க வாசிப்பார்.

அந்த இளைஞர் வேறு யாருமில்லை. அவர்தான் ஜெய் ஷா. அமித் ஷாவின் ஒரே மகன். 2010-ம் ஆண்டு வரை, அதாவது இந்த வழக்கு நடக்கும் வரை இவர் யார் என்றே யாருக்கும் தெரியாது.

என்ன வழக்கு அது?

சொஹராபுதீன் என்கவுண்டர் வழக்கில், 2010-ம் ஆண்டு சிபிஐ-யினால் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கின் பிணை விசாரணை நடக்கும் போது, ஜெய் ஷா நீதிமன்றங்களுக்கு வர தொடங்கினார். அப்போதுதான் பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் அவரை கவனிக்க தொடங்கினர்.

அந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் அமித் ஷாவுக்கு பிணை வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம், அவர் குஜராத்திற்குள் நுழைவதற்கு தடை விதித்தது. அந்த சமயத்தில் அமித் ஷா டெல்லியில் தங்க தொடங்கினார்.

அக்டோபர் 29, 2010 -ம் ஆண்டு, சொஹராபுதீன் என்கவுண்டர் வழக்கில் பிணையில் சபர்மதி மத்திய சிறையிலிருந்து வெளியே வரும் பாஜக தலைவர் அமித் ஷா. அவரை வரவேற்கும் அவரது மகன் ஜெய் ஷா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 29, 2010 -ம் ஆண்டு, சொஹராபுதீன் என்கவுண்டர் வழக்கில் பிணையில் சபர்மதி மத்திய சிறையிலிருந்து வெளியே வரும் பாஜக தலைவர் அமித் ஷா. அவரை வரவேற்கும் அவரது மகன் ஜெய் ஷா.

அப்போது அமித் ஷா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதியான நரன்புரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

ஆனால், அமித் ஷா நீதிமன்ற உத்தரவுகளினால், தனது சட்டமன்ற தொகுதியைவிட்டு வெகு தொலைவில் தங்க நேரிட்டதால், ஜெய் ஷா தனது தந்தையின் தொகுதி வாக்காளர்களின் பிரச்னைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் கவனிக்க நேரிட்டது.

அதுமட்டுமல்ல, தனது தந்தைன் பங்குசந்தை வணிக தொழிலிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

அந்த கடினமான காலக்கட்டத்தில் ஜெய் ஷாவை கூர்ந்து கவனித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அந்த இளைஞர் தன் தந்தையின் தொழிலை கவனிக்க தொடங்கியபின், அவர் வேறுவிதமாக உருமாறி இருந்தார் என்பது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர்

அப்பாவின் அடிச்சுவட்டில் பயணித்த ஜெய், குஜராத் கிரிக்கெட் சங்கத்திலும் இடம் பிடித்தார்.

நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமித் ஷா இடம் பிடித்தார்.

பின் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், தனது மகனுக்கு அந்த சங்கத்தின் இணை செயலாளர் பதவியைக் கொடுத்து, அனைத்து பொறுப்புகளையும் வழங்கினார்.

ஜெய் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, கைபேசி மூலம் பங்கு வணிக விற்பனையை மேற்கொள்வார்.

பிபிசி-யிடம் பேசிய குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் அதிகாரி ஹித்தேஷ் பட்டேல், "ஜெய் ஷாவையும் அமித் ஷாவையும் ஒப்பிட முடியாது. ஜெய் ஷா மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் இல்லை. அவருடைய பெரிய பிரச்னை என்னவென்றால், குஜராத் கிரிக்கெட் சங்கத்தைப் போல, பெரும் கிரிக்கெட் சங்கத்தின் தினசரி நடவடிக்கைகளை அவரால் கையாள முடியவில்லை."

நிர்மா பொறியியல் நிறுவனத்தில் பயின்று பொறியியல் பட்டம் பெற்றவர் ஜெய் ஷா. அவர் தன் கல்லூரி தோழியான ருஷிதா பட்டேலையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அப்பா, மகனுக்கு உள்ள ஒரே குணம், இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை வெளி உலகத்திற்கு காட்டியதில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :