6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார்.

ஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி அளித்திருந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி அளித்திருந்தது

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப் பிறகு, 433 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அநாமேதேயமாக பிபிசியிடம் பேசிய அதிகாரிகள், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்று கூறினர்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு அவற்றை ஒரு 'சாதனை' என்று குறிப்பிட்டுள்ளதுடன் மாநிலத்தின் 'சட்டம் - ஒழுங்கு நிலை முன்னேறி வருவதற்கான ஆதாரம்' என்றும் கூறுகிறது.

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை உடைய அந்த மாநிலத்தில் 22.2 கோடி பேர் வசிக்கின்றனர். கொடுமையான வன்முறை, கிளர்ச்சி மற்றும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்காக உத்தரபிரதேசம் பெரும்பாலான நேரங்களில் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

80 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களைவைக்கு அனுப்பும் இந்த மாநிலம் அரசியல் செல்வாக்கு மிக்கதும்கூட. மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக தேர்தல் சமயத்தில் பா.ஜ.க உறுதி அளித்தது.

உத்திரப்பிரதேச காவல் துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறது

ஆனால், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அம்மாநில அரசின் குற்ற ஆவணங்களின்படி, 2017-இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அங்கு 3,000 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-இல் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 2,376 ஆக இருந்தது.

கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால், வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

தான் ஆட்சிக்கு வந்ததும், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைக் குறைக்க காவல் துறையினரைக் கொண்டு 'ஆன்டி-ரோமியோ' குழுக்களை (anti-romeo squads) அமைத்தார் ஆதித்யநாத். ஆனாலும், பாலியல் குற்றங்கள் அவர் பதவியேற்றபின் அதிகரித்துள்ளன.

இது ஆதியநாத்தை தடுமாற வைத்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அறிவிப்புகள் அம்மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றாது என்பதை அவர் உடனடியாக உணர்ந்தார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கூட்டுப் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கூட்டுப் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்

அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இப்பிரச்னையைத் தீர்க்க வியூகம் வகுத்துக்கொண்டிருந்த நிலையில், என்கவுண்டர்கள் செய்வது தீர்வாக அமையும் என்றும், தற்போதைய தேவையாக இருக்கும் தன் அரசின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் இது உதவும் என்றும் அவர் நம்பியதாக அதிகாரிகள் கூறினர்.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் உத்தரபிரதேச முதலமைச்சராக 1980களில் இருந்தபோது, வழிப்பறிக் கொள்ளையர்களைக் குறிவைத்து பல என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டதன் பின் எழுந்த பரவலான விமர்சனங்களால் அவர் பதவி விலகினார்.

45 வயதாகும் யோகி ஆதியநாத்துக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. ஐந்து முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்து சாமியாரான அவர் சமூகப் பிரிவினையைத் தூண்டக்கூடிய இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். பல சமயங்களில், குறிப்பாக தேர்தல் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதற்காக அவர் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, மணிலா

உத்தரபிரதேசத்தில் நிகழும் குற்றச்சம்பவங்கள் பற்றிய கவலை அண்டை மாநிலமான டெல்லிக்கும் பரவி வருவதால், 2019-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவைப் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

பிபிசியிடம் பேசிய உயர் அதிகாரிகளும், காவல் துறையினரும் அந்த நடவடிக்கைகள் உத்தரபிரதேச அரசு மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

"இந்த என்கவுண்டர்களால் காவல் துறையினருக்கு ஒரு கற்பனையான மகிழ்ச்சி கிடைத்ததே ஒழிய, அரசு மீது எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், அவை மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை சிறுமைப்படுத்தியுள்ளன," என்று அநாமதேயமாக பிபிசியிடம் பேசிய ஒரு இளம் காவல் அதிகாரி தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறது

433 நபர்கள் உயிரிழந்ததற்கு தனது அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஆதியநாத் உணர்ந்தபோது, எல்லா என்கவுண்டர்களும் 'கொலைகள்' அல்ல என்று அதிகாரிகள் கூற ஆரம்பித்தனர்.

"காவல் துறையினரை எதிர்த்தவர்களும், தப்பியோட முயன்றவர்களுமே சுட்டுக்கொல்லப்பட்டனர்," என்று ஒரு மூத்த காவல் அதிகாரி கூறினார்.

அந்த 433 என்கவுண்டர் சம்பவங்களில் 19 குற்றவாளிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்றும் 89 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் இப்போது கூறுகின்றனர்.

காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூற்றுக்கள், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற விரும்பும் உத்தரப்பிரதேச அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :