பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜிநாமா

பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.புதன்கிழமையன்று மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தற்போதுள்ள சூழலில் ஆட்சி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. ஒத்த கருத்து எதுவும் உருவாகாத நிலையில், எனக்கு இதனைத் தவிர வேறு வாய்ப்புகள் இல்லை'' என்று தெரிவித்தார்.

நிதிஷ்குமாருக்கு மோதி பாராட்டு

இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோதி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாக நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தற்போது நிதிஷ்குமார் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த மாதத்தில் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது பல உறவினர்களின் இல்லங்களில் ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியது.

முன்னதாக, இன்று மாலை ஐக்கிய ஜனதாதள தலைவர்களுடன் நிதிஷ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனைக்கு பிறகு ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :