You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: கட்சிகள் கண்டனம்
சென்னை மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டம் தெரிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை கடந்த மே 21ஆம் தேதியன்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மெரீனாவில் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதற்கு முந்தைய தினம் அறிவித்தது.
இருந்தபோதும் மே 21ஆம் தேதியன்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்றனர். இதையடுத்து அதில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த ஜெகன், எம்ஆர்சி நகரைச் சேர்ந்த டைசன், தாம்பரத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பதாக சென்னை நகரக் காவல்துறை நேற்று தெரிவித்தது.
இதையும் படிக்கலாம்:
நினைவேந்தல் நிகழ்ச்சியில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். உள்ளிட்ட கட்சிகளும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இதனைக் கண்டித்துள்ளன. உடனடியாக குண்டர் சட்ட நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்