You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு: ஜாமீனில் வெளிவந்த வைகோ குற்றச்சாட்டு
பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் வைகோ குற்றம்சாட்டினார்.
தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஜாமீனில் வெளியேற விரும்பாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை சிறையிலிருந்து வெளிவந்த வைகோ, செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
மேலும் தனது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தான் தற்போது ஜாமீன் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக வைகோவின் ஜாமீன் கோரும் மனு, நேற்று புதன்கிழமை சென்னை 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், வைகோவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்தே தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்று வைகோ பதிலளிக்கையில், அதிமுக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்தார்.
அத்தோடு, பூர்ண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அப்போது வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான பொது மக்களின் போராட்டங்களை காவல்துறையால் தடுத்து நிறுத்த இயலாது என்றும், அப்போராட்டங்களில் ஈடுபடும் பொது மக்கள் மீது தொடர்ந்து காவல்துறையை கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் வைகோ குறிப்பிட்டார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்