You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியில் மைல் கல் எதற்காக?: பொன். ராதாகிருஷ்ணன் புது விளக்கம்
வட மாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள்களுக்கு உதவுவதற்காகவே தமிழ்நாட்டில் சில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலப் பெயர்களை அகற்றிவிட்டு, இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்படுவதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடமாநிலங்களில் இருந்து வரும் ஓட்டுனர்களுக்கு இந்தி தவிர வேறு மொழி தெரியாது என்பதால் அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்தியைப் பரப்பும் நோக்கம் இதில் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்கம், ஒதிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுனர்களுக்கு இந்தி தெரியாத நிலையில், பொது மொழியான ஆங்கிலத்தை அழித்தது ஏன்? ஏன்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மேலும் இந்த முடிவு, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் மைல் கற்களிலும் உள்ள ஊரின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டன.
இதையடுத்து, தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்