ஜெயலலிதா முதல் யோகி ஆதித்யநாத் வரை: மகுடம் சூடிய 'தனி' மனிதர்கள்

2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் அசாம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற சர்பானந்தா சோனோவால் மற்றும் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்பதுதான் அந்த ஒற்றுமை.

யோகி ஆதித்யநாத், மனோகர் லால் கட்டார் மற்றும் சர்பானந்தா சோனோவால்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், மனோகர் லால் கட்டர் மற்றும் சர்பானந்தா சோனோவால்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர்கள் இருவரையும் தவிர அக்கட்சியின் ஹரியானா மாநில முதல்வரான மனோகர் லால் கட்டரும் திருமணமாகாதவர்தான். இவர்கள் மட்டும் தானா? மாநில முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் இது வரை பதவி வகித்த பலர் திருமணமாகாதவர்கள்தான் அல்லது தாங்கள் பதவியேற்கும் போது துணையை இழந்தவர்களாகவோ அல்லது பிரிந்தவர்களாகவோ இருப்பது விந்தையளிக்கும் அம்சமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இந்தப்பட்டியலில் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்தது என்று கூறப்பட்டாலும், பால்ய விவாகமாக இருப்பதால், அது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

மேலும், அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போதும், இந்திய பிரதமராக பதவியேற்ற போதும் வாழ்க்கைத் துணையின்றி தனி மனிதராகவே இருந்துள்ளார்.

இந்திய பிரதமரான 'தனி' மனிதர் மோதி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 'தனி' மனிதர் மோதி

கடந்த காலத்திலும், நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்துள்ளனர். அரசியலின் உச்சத்தை அடைந்து, பாரதீய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியில் அமர்ந்த போது பிரதமராக பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாயும் இப்பட்டியலை சேர்ந்தவராவார்.

வெளிநாட்டில் நீண்ட காலம் வாழ்ந்த நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும், தன் தந்தையுமான பிஜு பட்நாயக் இறந்த பிறகு கடந்த 2000-ஆவது ஆண்டில், ஒடிசா முதல்வராக பதவியேற்றார். நவீன் பட்நாயக்கும் திருமணமாகாதவர்தான்.

நவீன் பட்நாயக்

பட மூலாதாரம், SANDEEP SAHU

படக்குறிப்பு, மணமாகாதவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நவீன் பட்நாயக்

விசித்திரமாக உள்ளதா? இந்தப்பட்டியல் மேலும் நீள்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை வென்று, 2011-இல் அந்த மாநில முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜியும் திருமணமாகாதவரே.

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

ஜெயலலிதா

''எனக்கென்று யாருமில்லை. குடும்பம், கணவன் என்று யாரும் எனக்கில்லை'' என்று கூறிய காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திருமணமாகாதவர். நீண்ட கால கலை உலக வாழ்க்கைக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா, கட்சியினரால் 'அம்மா' என்றழைக்கப்பட்ட போதிலும், அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதிவரை தனியாக...

ஜெயலலிதாவை போலவே 'கர்ம வீரர்' என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரும் திருமணமாகாதவர்.

மறைந்த மிழக முதல்வர் எம். ஜி. ஆர், கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மறைந்த பிறகு, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

மோதி, ஜெயலலிதா

பட மூலாதாரம், AFP

அரசியல் அனுபவம் இல்லாத நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற ஜானகி ராமச்சந்திரனின் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் சில நாட்களிலேயே கலைக்கப்பட்டது.

ராகுல் காந்தி

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் படுதோல்வியினால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள போதிலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வருங்கால பிரதமராக அவரது ஆதரவாளர்களினால் முன்னிலைப்படுத்தப்படும் சூழலில், மணமாகாதவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி

கான்ஷிராமின் தலைமையில் ஆரம்பத்தில் கட்சிப் பணியாற்றிய பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமைப் பொறுப்பையும், 4 முறை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பதவியும் வகித்த மாயாவதிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

துணையை பிரிந்து வாழும் பெண் முதல்வர்கள்

திருமணமாகாத தலைவர்கள் உயர் பொறுப்பில் இருந்து வருவதை அலசிய அதே வேளையில், திருமணமானாலும் மாநில முதல்வராக அல்லது இந்திய பிரதமராக பதவியேற்கும்போது தங்கள் துணையை இழந்த அல்லது பிரிந்து வாழும் தலைவர்களின் பட்டியலை காண்போம்.

தற்போதைய ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, டோல்பூர் மகாராஜாவை மணந்த போதிலும், ஒரு வருடத்திற்கு பின்னர், இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர்.

வசுந்தரா ராஜே சிந்தியா

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, திருமண பந்தத்தில் இருந்து விலகிய வசுந்தரா ராஜே சிந்தியா

அதன் பின்னர், வசுந்தரா திருமணம் செய்து கொள்ளவில்லை. பின்னர், 2003 ஆம் ஆண்டில் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆனார். தற்போதும், வசுந்தராவே ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக உள்ளார்.

தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரான மெஹ்பூபா முஃப்தி, தனது தந்தையின் பரிந்துரையின் பேரில் தனது உறவினரான ஜாவேத் இக்பால் என்பவரை மணந்தார். ஆனால், இவர்களின் திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மெஹ்பூபா முஃப்திக்கு இரண்டு மகள்கள் உள்ள போதிலும், இவரின் மணவாழ்க்கை ஒரு சில ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே அமைந்தது.

துணையை இழந்த நேரு மற்றும் இந்திரா

நேரு மற்றும் இந்திரா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, துணையை இழந்த நேரு மற்றும் இந்திரா

கடந்த காலத்திலும் இதைப் போல சில உதாரணங்கள் உண்டு. கடந்த 1947-ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் இந்திய பிரதமாக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அவரது மனைவியான கமலா நேரு, 1936-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

இதே போல், நேருவின் மகளான இந்திரா காந்தி, தனது கணவர் ஃபெரோஸ் காந்தி இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1966-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தலைவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், வாழ்க்கைத் துணை என்பது அவர்களது நிர்வாகத் திறனை பாதித்ததாகவோ அல்லது அதனால் கூடுதல் பலம் கிடைத்ததாகவோ அந்தத் `தனி'த்தகுதியை மதிப்பிட முடியாது என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்