சட்டப்பேரவையிலிருந்து ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், திமுக உறுப்பினர்கள்ஆளுநரை சந்திக்கச் செல்லவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

பட மூலாதாரம், SUNTV
திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபோது,எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சட்டை கிழிந்திருந்த நிலையில், வெளியே வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை போலிசார் தாக்கி வெளியேற்றினார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியில் போலிசாரால் அடித்தும் உதைத்தும், பூட்ஸ் காலால் மிதித்தும் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சபாநாயகர் தனபால், தனது சட்டையை திமுக உறுப்பினர்கள் கிழித்துவிட்டதாக கூறியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அதை அவரே செய்து விட்டு திமுக உறுப்பினர்கள் மீது பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார். ஆனாலும் அது போல திமுக உறுப்பினர்கள் செய்திருந்தால் அதற்கு பொறுப்பேற்று தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதாகவும், அவையை அமைதியாக நடத்தவேண்டும் என்றும், மறைமுக வாக்கு எடுப்பு நடத்த அனுமதிக்குமாறும் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறிய ஸ்டாலின், ஆனால் சபாநாயகர் இதற்கு மறுத்துவிட்டதாகக் கூறினார்.

பட மூலாதாரம், SUNTV
முன்னதாக இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியபோது , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிச்சாமி முன்மொழிந்தார்.
மேலும் ஸ்டாலின் பேசுகையில் , அவையை ஒத்திவைக்கவேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் கோரி ஒரு மனுவை சமர்ப்பித்த நிலையில்,தாங்கள் வெளியே வந்திருக்கிறோம் என்றார்.
அவையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவிக்கச் செல்லப்போவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியபோது , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிச்சாமி முன்மொழிந்தார்.

அதன் பின், ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்ததை அடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையைச் சுற்றி கேரோ செய்தனர். இதனால் அமளி ஏற்பட்ட நிலையில், அவையை முதலில் பிற்பகல் ஒரு மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடியபோது, இதே பிரச்சனையை திமுக உறுப்பினர்கள் எழுப்பி மீண்டும் குரலெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் சட்டசபைக் காவலர்களால் திமுக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அப்புறப்படுத்த முடியாததால், சிறிது நேரம் அவை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. அப்போது திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து தரையில் உட்கார்ந்து தர்ணா செய்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் போலிசார் உள்ளே நுழைந்து அவையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












