நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் முடிவு
எடப்பாடி பழனிச்சாமி அரசு நாளை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோரும்போது, அதை எதிர்த்து வாக்களிக்க இருப்பதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், NATARAJ
ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, "மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிககும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்," என்றார்.
"யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என நடுநிலை வகித்து வந்தேன். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி தொடர வேண்டும் என விரும்பினேன். அதற்காக, இருதரப்பினரிடமும் பேசி சுமுகத் தீர்வு காண முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை," என்றார் அவர்.
"மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞர்களின் எண்ணங்களை மதிக்க வேண்டும். அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டியது எனது கடமை. இதற்கு முன்பு இருந்த அரசாங்கமே இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால், நாளை ஓட்டெடுப்பு நடக்கும்போது, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பேன்," என நடராஜ் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்பதன் மூலம், தனது ஆதரவு பன்னீர் செல்வத்துக்குத்தான் என்பதை நடராஜ் மறைமுகமாக உணர்த்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













