You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலாவுக்கு காலை உணவு புளியோதரை
அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சாதாரண வகுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புக் கோரி சிறை அதிகாரியிடம் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை சிறையில் 6.30 மணிக்கு, தனது உறவினர் இளவரசியுடன் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இருவருக்கும் ஒரே அறை வழங்க முடியாது என்று நீதிபதி முதலில் தெரிவித்தாலும், பிறகு அவர்களுக்கு சிறையில் ஒரே அறை வழங்கப்பட்டது. இருவரும் நள்ளிரவு வரை பேசி்க் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு அவர்கள் உணவு வேண்டாம் என மறுத்துவிட்டனர். இன்று காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டனர். காலை உணவாக, புளியோதரை சாப்பிட்டனர். மதிய உணவில், சப்பாத்தி, சாப்பாடு, சாம்பார், மோர் வழங்கப்பட்டது.
சிறப்பு வகுப்பு வழங்க நீதிபதி மறுத்துவிட்ட நிலையிலும், இன்று சிறை அதிகாரியிடம், தனக்கு சிறப்பு வகுப்புக் கோரி மனுக்கொடுத்தார் சசிகலா.
தற்போதுள்ள சாதாரண வகுப்பு அறையில், கட்டில், காற்றாடி போன்ற வசதிகள் இல்லை. தரை விரிப்பு, போர்வை, குவளை, பொருட்கள் வைக்க இரும்புப் பெட்டி ஆகியவையே வழங்கப்படும். ஆனால், சிறப்பு வகுப்பில், கட்டில், மெத்தை, காற்றாடி, தனிக்கழிவறை போன்ற வசதிகள் இருக்கும். அத்துடன், பொதுவான ஓர் அறையில் இருக்கும் தொலைபேசியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், இந்தத் தீர்ப்புக் குறித்து மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்