ஓ.பன்னீர் செல்வம் திடீர் தியானம்: சென்னையில் பரபரப்பு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு சுமார் 9 மணிக்கு, திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், திடீரென இரவு நேரத்தில் அவர் அங்கு சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதைவிட, அவர் அங்கேயே நீண்ட நேரம் அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டார்.. பாதுகாப்பு அதிகாரிகளும், அவரது ஆதரவாளர்களும் அவருக்குப் பின்னால் நின்று காத்துக்கொண்டிருந்தார்கள்.

அதற்குள், தொலைக்காட்சிகளில் நேரலையாக காட்சிகள் ஒளிபரப்பானது. இதனால் அங்கு பெருமளவில் கூட்டம் கூடியது.

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டார். மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், பன்னீர் செல்வம் திடீரென தியானத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.