You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இரானிய சிறையில் பெண் கைதிகளின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை"
- எழுதியவர், பெட்ரா ஜிவிக்
- பதவி, பிபிசி வெர்ல்ட் சர்வீஸ்
இரானின் எவின் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறையில் தீ எப்படி தொடங்கியது என்பதும் இதற்கும் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதும் தெளிவற்று உள்ளது.
"நாங்கள் 200க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டோம்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறை பற்றி நன்கு அறிந்த ஒருவர் பிபிசி பெர்ஷிய சேவையிடம் தெரிவித்தார்.
வார இறுதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பயங்கர காணொளியில் சிறையில் இருந்து வெளிப்பட்ட தீயும், கரும்புகையும் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியான துப்பாக்கி சூடு சத்தமும் வெடிப்புகளின் சத்தமும் கேட்டன.
"தீ ஏற்பட்டதற்கான மூல காரணம் இப்போதும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகஇருப்பது குறித்தே நான் கவலைப்படுகிறேன்," என்று 2016இல் டெஹ்ரானின் மோசமான சிறைச்சாலையில் தனிமைச்சிறையில் 200க்கும் அதிகமான நாட்களை கழித்த முன்னாள் சிறைவாசியான அனா டைமண்ட் பிபிசியிடம் கூறினார்.
இரானிய பிரிட்டிஷ் பெண்ணான அனா டைமண்ட் வெறும் 21 வயது இருந்தபோது அவரை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரானிய புரட்சிகர பாதுகாப்புப்படையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் ஒரு வேனின் பின்புறத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றினார்கள். உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அனா அதை மறுத்தார்.
ஆனால் சிறைக்குள் இருப்பது எப்படி இருக்கும்?
"எவின் சிறை ஒரு புதிர் போன்றது," என்கிறார் அனா.
2016 ஆகஸ்டில் பிணையில் தான் விடுவிக்கப்பட்டபோது ஒரு சிறை காவலர் தன்னை ஒரு குறுகலான பாதை வழியே வெளியே அழைத்து வந்ததாக கூறினார்.
"பிறகு திடீரென்று ஒரு கதவு திறந்தது. நான் டெஹ்ரானில் இருந்தேன். நகரின் மையப்பகுதிக்கு நான் வருவதற்கு ஒரு கதவு தேவைப்பட்டது," என்று சம்பவத்தை நினைவு கூர்கிறார் அனா டைமண்ட்.
ஆரம்பத்தில் எவின் சிறைச்சாலை இரானிய தலைநகர் டெஹ்ரானின் வெளிப்பகுதியில் கட்டப்பட்டாலும், நகர விரிவாக்கத்தால் அது டெஹ்ரானின் சந்தடி மிகுந்த வடக்கு பகுதியாக மாறிவிட்டது.
"மனித உரிமை மீறல்கள்"
1972ஆம் ஆண்டில் முகமது ரெஸா பஹ்லவி ஆளுகையின் கீழ் எவின் சிறை கட்டப்பட்டது. தொடக்கத்தில் 300க்கும் அதிகமான கைதிகளுக்கான வசதிகளுடன் இந்த சிறை கட்டப்பட்டது. கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே அது இஸ்லாமிய இரானிய குடியரசின் கீழ் 15 ஆயிரம் கைதிகளை அடைக்கும் இடமாக விரிவடைந்தது.
1980களில் இந்த சிறைச்சாலை கொடுமைகளின் பிறப்பிடமாக மாறிப்போனது. அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கைகள் மற்றும் ஹ்யூமன்ரைட்ஸ் வாட்ச் அமைப்பு பதிவு செய்த சாட்சியங்கள் ஆகியவற்றின்படி சித்ரவதை மற்றும் மரணம், தூக்கிலிடுவது, ஏராளமான அரசியல் கைதிகள் காணாமல் போவது, மிருகத்தனமான தாக்குதல் அங்கு வாடிக்கையான நடைமுறை.
ஏராளமான அறிவாளிகள், மாணவர் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் இங்கு அடைக்கப்பட்டதால் இந்த சிறை "எவின் பல்கலைக்கழகம்" என்றும் அழைக்கப்பட்டது.
எவின் சிறையில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், மனித உரிமை அமைப்புகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாயின. கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் எவின் சிறையை அமெரிக்க அரசு 2018ஆம் ஆண்டு கருப்புப் பட்டியலில் சேர்த்தது.
கடந்த ஆண்டு சிறையில் இருந்து கசிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில், எவின் சிறையில் கைதிகள் துன்புறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
சிறையில் தான் அனுபவித்த துன்புறுத்தல்களை தனது உடல் இன்னும் மறக்கவில்லை என்று கூறுகிறார் அனா டைமண்ட்.
"இப்போதும் நான் குளிர்ந்த பகுதிகளில் இருந்தால் எனது இதய துடிப்பு அதிகமாகிறது. உடனே அந்த இடத்தை விட்டுப் போக மனம் துடிக்கிறது. மனதளவில் நான் அமைதியாக இருந்தாலும், உடல் அந்த சித்ரவதை உணர்வுகளை மறக்கவில்லை," என்கிறார் அனா.
ஆனால், எவின் சிறையில் அவர் அனுபவித்தது வெறும் குளிரை மட்டுமல்ல.
"எனது பாலினத்தை மிகவும் குறிப்பிடக் கூடிய வழிகளில் எல்லாம் அவர்கள் என்னை இழிவுபடுத்தினார்கள்," என்கிறார் அனா டைமண்ட்.
கன்னித்தன்மை சோதனை
சிறையில் தான் கன்னித்தன்மை சோதனைக்கும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அனா தெரிவிக்கிறார்.
பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு மருத்துவர் தமது இரண்டு விரல்களை நுழைத்து கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என சரிபார்க்கும் பரிசோதனை அது. அந்த பரிசோதனைக்கு அறிவியல்பூர்வ அடிப்படையே இல்லை என்றும் அனா கூறுகிறார்.
"எனது ஆரம்ப தண்டனை, உளவு பார்த்ததாக தண்டிக்கப்பட்டபோது உளவு பார்ப்பதற்காக நான் சாத்தியமான வகையில் நெருக்கமாகவோ மயக்கும் வகையிலோ நடந்ததாக அவர்கள் கூறி அதற்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரினர்," என்று அனா விவரித்தார்.
இன்று, "அது அவர்களின் நீண்ட மற்றும் விரிவான உளவியல் துன்புறுத்தலின் ஒரு பகுதி" என்று அனா நம்புகிறார். "அது எனது பாலினத்தை மிகவும் குறிப்பிட்டு இயன்ற வழிகளில் என்னை இழிவுபடுத்துவதற்கான வழி," என்கிறார் அனா டயமண்ட்.
சனிக்கிழமை இரவு என்ன நடந்தது?
போலீஸ் காவலில் 22 வயது பெண் மாசா அமினி உயிரிழந்ததால் இரான் முழுவதும் வாரக்கணக்கில் தொடர்ந்த அரசுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவு எவின் சிறையில் தீ பற்றியுள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கானோர் எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
எவின் சிறை ஒரு போர் களம் போல் இருந்ததாக பிபிசி பெர்ஷிய சேவையிடம் கூறிய ஒரு சிறைவாசியின் குடும்பத்துடன் நெருங்கியவர், சிறைச் சுவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை விவரித்தார்.
ஆனால், அந்த சம்பவம் குறித்த முரண்பட்ட தகவல்களும் உள்ளன.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறையில் உள்ள தொழில் பட்டறையில் இருந்து தீ பற்றியதாக நீதித்துறை தெரிவித்தது. அது ஒரு முன்கூட்டியே தப்பியோடும் திட்டம் என்றும், அதனை சிறைக்காவலர்கள் முறியடித்து விட்டதாகவும் அரசு ஊடகம் கூறுகிறது. இருப்பினும் சம்பவ இரவு என்ன நடந்தது என்பதை தீர்மானிப்பது கடினம்.
ஆனால், பிபிசி பெர்ஷிய சேவையிடம் பேசிய கைதி அந்த அலுவல்பூர்வ கூற்றை மறுக்கிறார். தங்களுடைய சக கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எதிராக சில கைதிகள் போராடிய போதே பதற்றம் தூண்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மற்ற வார்டுகளில் உள்ள கைதிகள் அவர்கள் சண்டையிடுவதையும் கூச்சலிடுவதையும் கேட்டதும் அவர்களும் முகப்புப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி பாதுகாவலர்கள் எதிர்வினையாற்றினர் என்று அதே வட்டாரம் பிபிசி பெர்ஷிய சேவையிடம் கூறியது.
விரைவாகவே பதற்றம் பிற வார்டுகளுக்கும் தீவிரம் அடைந்தது.
"கைதிகள் கதவுகளை நோக்கி விரைந்ததும் அவற்றை உடைத்தனர். கலவர தடுப்பு காவலர்கள் தாக்கினர். பிறகு எல்லா இடத்தில் இருந்தும் எங்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். எங்களுள் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
பிபிசி பெர்ஷிய சேவையின் ஃபர்னூஷ் அமீர்ஷாஹியின் கூடுதல் தகவல்களுடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்