You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் பெண்களின் ஹிஜாப் போராட்டமும், இணையதள சர்ச்சையும்: என்ன நடக்கிறது அங்கே?
இரானில் இணைய சேவை முடக்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாசா அமினி என்ற குர்திஷ் இன இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து, கடந்த ஒரு வாரமாக அங்கு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இரான் வழக்கமாக அனுமதிக்கும் இரு முக்கிய தகவல் தொடர்பு செயலிகளான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை தற்போது முடக்கப்பட்டுள்ளதாக இணைய கண்காணிப்பு குழு நெட்ப்ளாக்ஸ் தெரிவித்துள்ளது.
இரானிய பயனர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த இரு செயலிகளுக்கும் மில்லியன் கணக்கான இரானியர்கள் பயனாளர்களாக உள்ளனர். அண்மை ஆண்டுகளில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இந்த இரு செயலிகளும் மிகவும் பிரபலமடைந்தன.
டெலிகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் சேவையும் அவ்வப்போது முடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய இந்த முடக்கமானது, ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினி போலீஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட போராட்டம் தீவிரமடைந்ததால் கொண்டுவரப்பட்டது.
கடந்த வியாழன் இரவு ஓரளவிற்கு இணைய சேவை மீண்டும் கிடைத்ததாகவும், ஆனால் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் முடக்கம் ஏற்பட்டதாகவும் நெட்ப்ளாக்ஸ் தெரிவிக்கிறது.
இரானில் உள்ள மக்கள் ஆன்லைன் செயலிகள் மற்றும் சேவைகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் இருப்பதற்கான அவர்களின் உரிமை விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி ட்வீட் செய்துள்ளார்.
ஆனால், பயனாளர்களைத் துண்டிப்பதில் மெட்டா நிறுவனம் உடந்தையாக இருப்பதாகச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
மெட்டா நிறுவனம் பாரசீக மொழி பேசும் மதிப்பாய்வாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் விதிகளை மீறும் பதிவுகளை அகற்றுகிறார்கள்.
மெட்டா நிறுவனத்தின் விதிகளை மீறும் வகையில் இருக்கும் பதிவுகள் குறித்து பயனாளர்கள் புகாரளித்தாலோ அல்லது தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலோ, அவை நீக்கப்படும்.
இரானிய போரட்டங்களை ஆதரிக்கும் பதிவுகளை மெட்டா நிறுவனம் நீக்கியதற்கான ஆதராங்களைச் சிலர் பகிர்ந்துள்ளனர்.
வி.பி.என். மற்றும் ப்ராக்ஸி வசதிகளைப் பயன்படுத்தியும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியவில்லை என்று அந்த மக்கள் கூறுகின்றனர்.
பொதுவாக ஓர் இணையதளம் அரசாங்கத்தால் முடக்கப்பட்டால், வி.பி.என். வசதியை உபயோகித்து அதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தத் தடை வேறுவிதமாகத் தெரிகிறது.
உண்மையில் என்ன நடக்கிறது?
இரானின் மிகப்பெரிய மொபைல் ஃபோன் ஆபரேட்டர் ஆஃப்லைனில் இருப்பதால் இணைய முடக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இரான் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஆறு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், தகவல் தொடர்பு அமைச்சர் பாதுகாப்பு காரணங்களால் செல்பேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நெட்ப்ளாக்ஸை சேர்ந்த ஐசிக் மேட் பிபிசியிடம் பேசும்போது, "வீதிகளில் அமைதியின்மை ஏற்படும்போது அதனைத் தடுக்க இரானிய அதிகாரிகளுக்கு கையில் இருக்கும் கருவிகளில் இணையமும் ஒன்று" என்றார்.
"இரானில் தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் கிடையாது. இணையம் மட்டுமே போரட்டக்காரர்கள் தங்களது குரலைப் பகிர்ந்துகொள்ள இருக்கும் தளம்" என்றும் அவர் கூறுகிறார்.
அமினியின் மரணம் தனிநபர் சுதந்திரம் மற்றும் நாட்டின் பொருளாதார சவால்கள் குறித்த பெரும் கோபத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
தங்கள் ஹிஜாப்பை தீயிட்டுக் கொழுத்தி போராடும் பெண்கள், அதிகரிக்கும் ஒடுக்குமுறை குறித்து தாங்கள் அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
"இணையம் முடக்கப்பட்டுவிட்டதால் உலகம் எங்களை விரைவில் மறந்துவிடும் என்பது கவலையளிக்கிறது. அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார் தன்னுடைய அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத செயற்பாட்டாளர் ஒருவர்.
பல போராட்டங்களும் பிரசாரங்களும் சமூக வலைத்தளங்கள் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டன. ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் அணிதிரட்டுவது கடினம்.
"நாடு முழுவதும் இணைய சேவையை முடக்குவது என்பது இரானிய அதிகாரிகளின் தீவிரமான நடவடிக்கை. தங்களுடைய ஆட்சியின் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்கின்றனர்" என்கிறார் பிபிசியின் உண்மை சரிபார்ப்பு குழுவைச் சேர்ந்த ஷயான் சர்தாரிசாதே.
"போராட்டக்காரர்களின் ஒழுங்கமைத்தல், தொடர்புகொள்ளல் மற்றும் வெளியுலகிற்கு அறிவித்தல் ஆகியவற்றுக்கான திறனை முடக்க இது அவர்களிடம் இருக்கும் வலிமையான கருவி. அதேநேரத்தில், இத்தகைய நடவடிக்கை பொருளாதாரம், வணிகம் மற்றும் பொது சேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்" அவர் கூறுகிறார்.
"எனினும், நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரும் பாதிப்பு உண்டாவதைத் தவிர்ப்பதா, எந்த விலை கொடுத்தும் அரசியல் அமைதியின்மையை ஒடுக்குவதா என்று வரும்போது அவர்கள் இரண்டாவதையே தேர்வு செய்கின்றனர்" என்கிறார் ஷயான் சர்தாரிசாதே.
போராட்டக்காரர்களை ஒடுக்குவது மற்றும் இணையத்தை முடக்குவது, இரானில் மக்களின் குரலை நசுக்க கடந்த காலங்களில் உதவியது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த போரட்டம் அளவிற்கு நிலைமை மோசமடையக்கூடும் என்ற அச்சமும் தற்போது அதிகரித்துவருகிறது.
அந்தப் போராட்டங்களின்போது பல நாட்களுக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள இரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, கலவரம் செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
"இரானில் எப்பொழுதும் போராட்டங்கள் நடந்துள்ளன. எதிர்ப்பாளர்களின் குரல்கள் கேட்கப்படும். எனினும், எதிர்ப்புகள் கலவரத்திலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்