You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவுப் பொருள்: இந்த 5 உணவு வகைகள் உயிரைக் கொல்லவும் செய்யும்
மனித குல வரலாற்றில் பல்வேறு வகையான தாவர, விலங்குகளை மனித இனம் உணவாக உட்கொண்டுள்ளது. இன்று வரையிலும் உணவும் அதன் விளைவுகளும் குறித்த ஆய்வுகள் ஓய்ந்தபாடில்லை.
பல சமயங்களில் ஒரு சமூகம் விரும்பி உண்னும் உணவு இன்னொரு சமூகத்தில் அபத்தமாக அறியப்படுகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் பெரும் விருப்பத்துடன் உட்கொள்ளபடும் அதே உணவு, பிற சமூகங்களில் தவறானதாக/அபத்தமான ஒன்றாக கருதப்படும். அவற்றுக்கு காரணமாக கலாச்சாரம் மற்றும் மரபு அகியவை மட்டுமே சொல்லப்பட்டன. அதை உண்டால் இறந்துவிடுவார்கள் என்று அறிவியல் ரீதியாக ஏதும் சொல்லப்படுவதில்லை.
ஆனால், கீழே குறிப்பிடப்படும் 5 உணவுப் பொருட்களை உண்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்துவிடுவீர்கள் என்று அறிவியல் சொல்கிறது. அந்தப் பட்டியலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பலூன் மீன்
சயனைடை விட மோசமான விஷம் என்று இந்த மீனைச் சொல்வதுண்டு. டெட்ரோடோடாக்சின் என்ற அதிவேகமாக பரவக்கூடிய விஷம் இந்த மீனில் உண்டு.
இருந்தும், ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு உணவுப்பொருள் சமைக்கப்படுகிறது. அது விரும்பி உண்ணப்படும் பிரபலமான உணவுப்பொருளாகவும் இருக்கிறது.
சூப்புடன் சேர்த்து பரிமாறப்படும் இந்த மீன், பல ஆண்டுகாலப் பயிற்சி உடையவர்களால் மட்டுமே சமைக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு இதைப் பரிமாறுவதும் கூட மிகவும் தேர்ந்த, நல்ல அனுபவமிக்க சமையல் நிபுணர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த மீனின் மூளை, தோல், கண்கள், கருப்பை, குடல் ஆகியவை விஷம் நிறைந்தவை என்பதால், நிபுணர்களால் முறையாக அவை நீக்கப்பட்டு, பின்னரே சமைக்கப்படுகின்றன.
காசு மார்ஸ் சீஸ்
சீஸ் ஒன்றும் நமக்கு புதிய பொருள் அல்ல. ஆனால், இந்த சீஸ் கிரீம் போல இருக்கும்.
அதனாலென்ன என்கிறீர்களா? அந்த சீஸ் கிரீமாக மாறுவதற்கு பயன்படுத்தப்படுபவை, பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் (லார்வா) என்று தெரிந்த பிறகு அப்படி கேட்க மாட்டீர்கள்.
இந்த சீஸின் கிரீம் தன்மைக்கு மட்டுமல்ல, சுவைக்கும் கூட்டுப்புழுக்கள்தான் காரணம். ஆனால், சுவையாக இருக்கிறது என்பதற்காக எளிதில் இதைச் சாப்பிட முடியாது.
சாப்பிடும்போது புழு பிடிக்கவே நேரம் சரியாக இருக்கும். இந்த சீஸில் இருக்கும் புழுக்கள் இறந்துவிட்டால் இந்த சீஸ் கெட்டுப்போய் விட்டது என்று பொருள்.
அப்படிக்கெட்டுப்போனால் இது, உலகின் மிக மோசமான உணவாக கருதப்படுகிறது. இதை உண்பவர்களுக்கு கடுமையான வாந்தி பேதி, அழற்சி, வயிற்று உபாதைகள் ஆகியவை ஏற்படலாம்.
ரூபார்ப் தண்டுகள்
பிரிட்டிஷ் குசைன் வகைகளில் பயன்படுத்தப்படும் ரூபார்ப் தண்டுகள் ஆபத்தான உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. பார்ப்பதற்கு கீரைத் தண்டு போல இருந்தாலும் இது உண்ணும்போது பல சமயங்களில் விஷமாக மாறிவிட வாய்ப்புள்ளது.
ஆனால், இது எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என்பது மட்டும் இன்னும் விவாதப்பொருளாகவே இருக்கிறது.
தாமரைத் தண்டு என்று இந்தியா, இலங்கையில் அழைக்கப்படும் இந்த சமையல் பொருளில் இருக்கும் ஆக்சாலிக் அமிலம், சிறுநீரகக் கற்களை உருவாக்கக் கூடியது.
சிவப்பு சோயா பீன்ஸ்
பொதுவாகவே பீன்ஸ் ஒரு ஆரோக்கியமான காய்கறி என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பீன்ஸ் வகைகளும் உண்டு. சிவப்பு பீன்ஸ் மற்றும் சோயா பீன்ஸ் இரண்டும் அப்படிப்பட்டவைதான்.
புரதம், நார்ச்சத்து, ஊட்டச்சத்துகள் ஆகியவை இருந்தாலும் எளிதில் செரிமானமாகாத கொழுப்பு பகுதியையும் கொண்டிருக்கின்றன இந்த பீன்ஸ் வகைகள்.
அடிவயிற்று கோளாறு, வாந்தி பேதி ஆகியவை இதனால் ஏற்படலாம். சமைப்பதற்கு முன் 12 மணி நேரம் இந்த பீன்ஸ்கள் நீரில் ஊறவைக்கப்பட வேண்டும். அதன்பிறகே வேகவைத்து பயன்படுத்தப்பட வேண்டும்,
ஜாதிக்காய்
இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட ஜாதிக்காய், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் இருக்கிறது.
சைவ, அசைவ வேறுபாடின்றி சமையலிலும் சில பானங்கள் தயாரிப்பிலும் கூட ஜாதிக்காய் பயன்படுத்தப்படுவதுண்டு.
ஆனாலும், ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால், வாந்தி மயக்கம், வலி, மூச்சுத்திணறல், உளவியல் பாதிப்பு ஆகியவற்றையும் கூட ஏற்படுத்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்