You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது 'அபாரமான நகைச்சுவை உணர்வும்'
கடந்த 70 ஆண்டுகளாக ஐக்கிய ராஜியத்தின் அரச தலைவராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத், பதற்றமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வழிநடத்தினார். பொதுவெளியில் அவரது வாழ்க்கை மிகவும் கவனமாக கையாளப்பட்டது. அப்போது அவர் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத வகையில் இருப்பார்.
ஆனால் அவர் பல தருணங்களில் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சற்று வயதான காலத்தில் நிறைய வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சஸ்ஸெக்ஸின் கோமகன் ஹேரி, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவரது பாட்டி "சிறந்த நகைச்சுவை உணர்வை" கொண்டிருப்பதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம் என்று குறிப்பிட்டார்.
வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சர் ஆண்டனி செல்டன், ராணி தன்னைத் தானே தீவிரமான ஒருவராக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்: "இந்த பண்பு அவரது ஆட்சியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்தது," என்றார் செல்டன்.
96 வயதில் ராணி எலிசபெத் இறப்பதற்கு முன்பு பேசிய அரச குடும்பத்தின் வரலாற்றாசிரியர் ராபர்ட் லேசி, "சிரிப்பது என்பது நாம் உயிர் வாழ முக்கியமான உத்தியாகும்," என்று கூறினார்.
அவரது நகைச்சுவை உணர்வை நம்மிடம் வெளிப்படுத்திய சில தருணங்களும் நிகழ்வுகளும் இங்கே:
கரடியுடன் தேநீர் விருந்து
பிரிட்டன் ராணியாக பதவியேற்று 70 ஆண்டுகள் ஆனதையொட்டி கடந்த ஜூன் மாதம், பிபிசி சார்பில் பக்கிங்ஹாம் அரண்மனையில் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், பேடிங்கடன் கரடியுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் விருந்தில், ராணி எலிசபெத் பங்கேற்பது போன்று படமாக்கப்பட்டது.
இந்த விருந்தின்போது, கரடி தான் அணிந்திருந்த சிவப்பு நிறத் தொப்பியைக் கழற்றி, தனது விருப்ப உணவான மர்மலேட் சாண்ட்விச்சை எடுத்தது.
எப்போதும், அவசரத் தேவைக்காக இந்த இடத்தில் ஒரு சாண்ட்விச் வைப்பது வழக்கம் எனவும் கரடி தெரிவித்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ராணி எலிசபெத் தனது கருப்பு நிற ஹேண்ட்பேக்கில் இருந்து, ஒரு சாண்ட்விச்சை எடுத்து, தானும் வைத்திருப்பதாக கரடிக்கு நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
பேரனுடன் ரசித்த வீடியோ
2016ம் ஆண்டு இன்விக்டஸ் கேம்ஸ் தொடர்பான விளம்பர முன்னோட்ட நிகழ்வில் தனது பேரன் இளவரசர் ஹேரியுடன் ராணி இரண்டாம் எலிசபெத் தோன்றி நடித்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தக் காட்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் இணைந்து இளவரசர் ஹேரிக்கு, விளையாட்டு போட்டிக்கான சவால் விடுக்கும் வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி இருப்பார்.
இளவரசர் ஹேரி, அதனை தனது பாட்டியிடம் காண்பித்து விளக்குவார். அப்போது எதேச்சையாக, போட்டியில் பங்குபெறு என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ராணி எலிசபெத் தெரிவித்திருப்பார்.
மிமிக்ரி செய்யும் ராணி
தனிப்பட்ட தருணங்களில், ராணி நன்கு மிமிக்ரி செய்வார். அவர் வெவ்வெறு உச்சரிப்புகளையும், பேசும் விதங்களையும் செய்து காட்டுவார் என்று 'தி கிரவுன்' என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடருக்கு வரலாற்று ஆலோசகராக இருந்த லேசி கூறுகிறார்.
ரஷ்ய முன்னாள் தலைவர் போரிஸ் யெல்ட்சின் போல ஒரு குறிப்பிட்ட சைகையை செய்து காட்டுவார் என்று ராணி இரண்டாம் எலிசபெத்தின் 'விக்கடு விட்' புத்தகத்தை எழுதிய கரேன் டால்பி கூறுகிறார்.
மேலும் அவர் மற்ற அரசியல்வாதிகளை போலவும், தொலைக்காட்சி கதாபாத்திரங்களை போலவும் செய்து காட்டுவார்.
ராணியின் நகைச்சுவை அடிக்கடி 'தன்னிகழ்வாகவும் தன்னை தானே கேலி செய்வது போலவும்' இருக்கும் என்று லேசி விவரித்தார்.
ஓர் அரசியல்வாதி ராணியுடன் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது அலைபேசி ஒலித்தது.
பிறகு, அவர் அலைபேசி அழைப்பை துண்டித்த பிறகு, ராணி இவ்வாறு கூறினார்: "அழைப்பில் யாரும் முக்கியமானவர் அல்ல என்று நான் நம்புகிறேன்."
வாளால் கேக் வெட்டிய ராணி
2021ம் ஆண்டு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் ராணி எலிசபெத், வழக்கத்துக்கு மாறாக ஒரு செயலை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆம், அந்த நிகழ்வில் கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்றபோது, ராணி எலிசபெத், வாளை எடுத்து கேக் வெட்டியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ராணி வாளை எடுக்கும் முன், அங்கிருந்த தன்னார்வலர் ஒருவர், கேக் வெட்டுவதற்கு என பிரத்யேக கத்தி இருப்பதாக ராணி எலிசபெத்திற்கு நினைவூட்டியும், அதனை எடுக்க மறுத்து வாளில் கேக் வெட்டினார்.
''அது இருப்பது எனக்குத் தெரியும். இது வழக்கத்துக்கு மிகவும் மாறானது,'' என்று கேக் வெட்ட வாளை எடுத்துக்கொண்டே ராணி கூறினார்.
நகைமுரண்
பால்மோரலில் உள்ள தனது வீட்டில், பாதுகாப்பு அதிகாரியுடன் ஒரு மழை நாளில் நடைபயணம் மேற்கொண்ட போது, ராணி தற்செயலாக சில அமெரிக்க பயணிகளை சந்தித்த கதை டால்பிக்கு மிகவும் பிடித்த ஒன்று.
துணியால் முழுவதும் சுற்றியிருந்த ராணியின் உருவத்தை அடையாளம் காணாத சுற்றுலாப் பயணிகள், அவர் எப்போதாவது ராணியை சந்தித்திருக்கிறாரா என்று அந்த அதிகாரியிடம் கேட்டனர்.
அப்போது அவர் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரியை சுட்டிக்காட்டியவாறு, "இல்லை, ஆனால் இவர் சந்தித்திருக்கிறார்," என்று பதிலளித்தார்.
மற்றொரு தனிப்பட்ட பயணத்தில், நார்ஃபோக்கில் ஷாப்பிங் செய்யும்போது, ஒரு கடை உதவியாளர், "நீங்கள் ராணியைப் போலவே இருக்கிறீர்கள்" என்று அவரிடம் கூறினார்
அதற்கு ராணி: "இது எவ்வளவு நம்பிக்கையளிக்கிறது" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
மக்கள் தன்னை சுற்றி பதற்றமாக இருக்கும்போது, பதற்றத்தைத் தணிப்பதற்கும் ஒரு பயனுள்ள வழியாக நகைச்சுவை இருந்துள்ளது.
"மற்றவரை மகிழ்விக்கவும், வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தைப் பார்க்கும் திறன்' அவருக்கு இருப்பதாக சர் ஆண்டனி கூறினார்.
டாமி கூப்பர் உள்பட பல நகைச்சுவை நடிகர்களை ராணி சந்தித்துள்ளார். அப்போது, அவருக்கு கால்பந்து பிடிக்குமா என்று டாமி கூப்பர் ராணியிடம் கேட்டதாக டால்பி கூறுகிறார்.
அவர் குறிப்பாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறியபோது, அதற்கு ராணியிடம் அவர் "அப்படியானால், உங்களின் இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் எனக்கு கிடைக்குமா?" என்று கேட்டார்.
"இயல்பாக இருப்பதற்கான ஒரு வழி"
உயர்மட்ட அளவில் நடக்கும் விழாக்களில் அனைவரின் கவனமும் அவர் மீது இருக்கும்.
பிரிட்டன் உளவியல் சங்கத்தின் ஆட்ரி டாங்கின் கூற்றுப்படி, இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு சிரிப்பு மிக முக்கியமான பதில்.
"இது இயல்பாக இருப்பதற்கான ஒரு வழி," என்று அவர் கூறுகிறார்.
மக்களின் பதற்றத்தைப் போக்கும் ஒரு வழியாகவும் சிரிப்பு உள்ளது.
இது ஒரு பிணைப்புக்கான வழியாகவும் உள்ளது. மேலும் ராணியும் இளவரசர் பிலிப்பும் ஒன்றாகச் சிரித்து மகிழும் குணம் கொண்டவர்கள்.
ஆனால் அது சிக்கலையும் ஏற்படுத்தலாம்.
ஒரு நிகழ்வுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் சிரிப்பது பரவாயில்லை. ஆனால் தவறான தருணத்தில் சிரிப்பது, அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இத்தகைய உணர்ச்சிகள் ஒரு கணத்தின் மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவதற்கான மனிதர்களின் இயல்பான சைகையாக இருக்கலாம் என்று டாக்டர் டாங் கூறுகிறார்.
கனடிய பிரதமர் ஜீன் கிரெட்டியன் முறைப்படி பதவி ஏற்று, கையெழுத்திடும் விழாவில், பேனாவின் முனையை கழற்றிவிட்டு, பின் சத்தமாக பதவி ஏற்றுகொண்டபோது, ராணி தமது சிரிப்பை அடக்க போராடினார் என்று டால்பி விவரிக்கிறார்.
"சில செயல்கள் தவறாக நடக்கும்போது, அவர் கோபப்படுவதை விட சிரிக்கவே செய்வார்," என்று சர் ஆண்டனி கூறுகிறார்.
2003ஆம் ஆண்டு வின்ட்சர் கோட்டையில் ஒரு ராணுவ மதிப்பாய்வின்போது, தேனீக்கள் கூட்டத்தால் குழப்பம் ஏற்பட, ராணி சிரித்துக் கொண்டிருப்பதை புகைப்படக் கலைஞர் கிறிஸ் யங் படம்பிடித்தார்.
"இது மனிதர்கள் இயல்பாக இருக்கும் தருணம் என்பதை நான் உணர்ந்தேன்," என்று யங் கூறினார்.
"அவர் ஒரு சிறுமியைப் போல சிரித்தார்."
அவரது 1991 கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், ராணி நகைச்சுவை உணர்வைப் பற்றிய தனது சொந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
"நாம் நம்மை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை," என்று அவர் கூறினார்.
"நம்மில் யாருக்கும் இத்தகைய ஞானம் இல்லை."
அரச குடும்ப நிருபர் சீன் கோக்லான் எழுதியது.