ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்: வரலாறு நிற்கும் தருணம்

Queen

பட மூலாதாரம், NPG

    • எழுதியவர், ஜானி டைமண்ட்
    • பதவி, அரச குடும்ப செய்தியாளர்

வரலாறு நிற்கும் தருணம் இது; ஒரு நிமிடம், ஒரு மணிநேரம், ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு; வரலாறு நிற்கும் தருணம் இது.

இரண்டு உரைகள். ஒரு வாழ்க்கையும் ஆளுகையும் முழுவதுமாக இரண்டு வெவ்வேறு சகாப்தங்களில் இருந்து பல தசாப்தங்களை ஒன்றாக இணைக்கும் நூலை ஒளிரச் செய்கின்றன. இரண்டு உரைகளிலுமே ஒரு நாற்காலி, ஒரு மேசை, ஓர் ஒலிவாங்கி, ஒரு பேச்சு. இரண்டும் அந்த உயர்ந்த குரல், துண்டு துண்டாகத் துல்லியமாக வந்து விழும் உயிரெழுத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டவை. பிறர் முன் உரையாற்றுவது குறித்த சிறு தயக்கம், அவரை விட்டு ஒருபோதும் விலகியது போல் தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒரு பயங்கரமான குளிர்காலத்தில் பிரிட்டிஷ் மக்கள் அவதிப்பட்டாலும், ஒரு தருணம் மாத்திரம் சூரிய ஒளி பட்டு இதமானதாக இருந்தது. ஓர் இளம் பெண், உண்மையில் ஒரு சிறுமியை விட முதிர்ந்த தோற்றத்துடன், மேலே இழுத்துக் கட்டப்பட்ட கருமையான கூந்தலுடன், கழுத்தில் இரண்டு முத்துச் சரங்களை அணிந்து, முதுகை வளைக்காமல் நேராக அமர்ந்திருக்கிறார். அவருடைய இளமையான தோலில் எந்தத் சுருக்கங்களும் இல்லை. அவர் மிகவும் அழகாக இருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு வாழ்க்கை திறக்கிறது.

உலகெங்கிலும் உள்ள தனது நேயர்களுக்கு அந்த வாழ்க்கையை அவர் ஒப்புவிக்கிறார். "இந்தத் சபதத்தை தனியாக நிறைவேற்ற எனக்கு வலிமை இல்லை", என்று கூறி வரும் ஆண்டுகளில் அவர்களின் ஆதரவை அவர் கோருகிறார்.

QUEEN
படக்குறிப்பு, இரண்டு சகாப்தங்களின் தருணங்கள் - மேலே உள்ள படத்தில் தனது 21-ஆவது பிறந்த நாளிலும், கீழே உள்ள படத்தில் தனது 75-ஆவது வயதிலும் உரையாற்றும் ராணி.

பல தசாப்தங்களுக்குப் பிந்தைய அவரது உரை அலுவல்பூர்வமானது. ஐரோப்பாவில் போர் முடிவடைந்த 75வது ஆண்டு நிறைவில், அவர் ஒரு மேசைக்கு பின்னால் அமர்ந்திருக்கிறார். மறைந்த மன்னரான அவரது தந்தை, சீருடையில், அவரது வலதுபுறம் புகைப்படமாக இருக்கிறார்.

அவருடைய கூந்தல் இன்னும் இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. அது இப்போது வெள்ளையாக இருக்கிறது. ஒரு நீல உடை, அதில் இரண்டு அணிகலன்கள் குத்தப்பட்டிருக்கின்றன. மூன்று சரங்களைக் கொண்ட முத்து மாலையை அணிந்திருக்கிறார். பல தசாப்தங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து கழிந்துவிட்டன. ஆனால் அவருடைய கண்கள் இன்னும் பிரகாசிக்கின்றன. அவருடைய குரல் இன்னும் தெளிவாக இருக்கிறது. மேசை பெருமளவு காலியாக உள்ளது. ஆனால் புகைப்படத்துக்கு வலது முன்புறத்தில் ஒரு காக்கி தொப்பி, அதன் முன்புறத்தில் ஒரு பேட்ஜ் ஆகியவை இருக்கின்றன.

"அனைவருக்கும் ஒரு பங்கு இருந்தது" என்று அவர் நீண்ட காலத்திற்கு முந்தைய போரைப் பற்றி கூறுகிறார்.

அந்தத் தொப்பி துணை பிராந்திய சேவை அதிகாரியான விண்ட்சருக்கு சொந்தமானது. இளம் இளவரசி எலிசபெத், தன்னை ராணுவத்தில் சேர அனுமதிக்குமாறு தன் அன்பான தந்தையை நச்சரித்தார். அப்போதுதானே அவரையும், பல தசாப்தங்களாக அவளுடைய நாட்டையும் வரையறுத்த போர் முடிவுக்கு வந்த பிறகும் , அவர் சீருடையில் பணியாற்ற முடியும்? இப்போது, ​​75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மகத்தான மற்றும் வீரம் மிக்க வெற்றியின் ஆண்டு விழாவில் அவர் நாட்டு மக்களுடன் பேசும் போது, ​​தொப்பிக்கு பெருமையளிக்கப்பட்டது.

QUEEN
படக்குறிப்பு, ராணுவச் சேவை: 1952 இல் கிரெனேடியர் காவலர்களையும், 1957 இல் RAF குழுவையும் ஆய்வு செய்தார்

தொப்பி என்பது அவர் மிகவும் போற்றிய ராணுவச் சேவையின் எளிய நினைவூட்டல். அந்த பொன்னான நாளுக்கு பல தசாப்தங்களுக்கு முன்பே அவர் வழங்கிய சேவை, தேசம், காமன்வெல்த் மற்றும் பேரரசு என வளர்ந்த ஆண்டுகளில் அவர் கண்ட சேவை, உலகின் மற்றப் பகுதிகள் சுதந்திரமாக இருக்க உயிரையும் உறுப்புகளையும் கொடுத்தது. அவர் நம்பிய சேவை அவர் மரபுரிமையாகப் பெற்ற கிரீடத்தின் இதயமாக உள்ளது; அவருக்கு நீண்ட ஆயுளையும் அர்ப்பணித்தது.

சேவையாற்றுவதற்கான அந்த உறுதிமொழி அளித்த மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, பொதுவில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருந்தது. அது அவரது ஆட்சியின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட தருணம். "நான் முடிவெடுப்பதில் அனுபவமில்லாத காலத்தில் அந்த சபதம் செய்யப்பட்டது" என்று அவர் பேசினார். "ஆயினும் நான் அதில் ஒரு வார்த்தை குறித்தும் வருத்தப்படவோ, அதில் இருந்து பின்வாங்கவோ இல்லை."

பல தசாப்தங்களாக, அவர் பொதுவில் தன்னைப் பற்றி குறைவாகவே பேசினார், குறைவாகவே வெளிப்படுத்தினார். ஒளிபரப்பு செய்யும் வயதடைந்த சிறுமியானதில் இருந்து அவர் ஒரு நேர்காணலும் கொடுக்கவில்லை. ஒருமுறை அல்லது இரண்டு முறை அவரது நம்பகமான நண்பருடன் "உரையாடியபோது" படமாக்கப்பட்டிருக்கிறார். அதுவும் அரச நகை சேகரிப்பு போன்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒன்றைப் பற்றி நட்புடன் பேசிக் கொண்டவைதான்.

அவருடைய சொற்களில் சர்ச்சை இருக்கிறதா, அவரது குணம் பற்றி ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடுவார்கள். ஆனால் அவர் மிகவும் கவனமாக இருந்தார் - அவருடைய நண்பர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் - எதையும் தப்பித் தவறிக் கூட வெளியில் பேசிவிடமாட்டார்கள்.

அவர் ஊடகத்தை புறக்கணிக்கவில்லை. அவரது முடிசூட்டு விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிப்பது, கிறிதுஸ்மஸ் ஒளிபரப்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது, வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பேசுவது என்ற அவரது முடிவுகள் இதைக் காட்டும். "நான் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் கூறுவார்.

QUEEN
படக்குறிப்பு, தேச சேவையில் - 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 1973 இல் ஒரு கச்சேரியில் அப்போதைய பிரதமர் எட்வர்ட் ஹீத்துடன்

ஒளிபரப்புகள், செய்தித்தாள் பிரசுரங்கள் போன்றவற்றுக்காக எடுக்கப்பட்ட நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகளை உடுத்திய எண்ணற்ற புகைப்படங்கள், காட்சிகள் ஆகியவை அவர் ராணியாக இருப்பதன் ஒருபகுதி. அவரது வேலையின் அங்கம். மற்றபடி அவரது உணர்வுகளை பொதுவில் பேசுவது அதில் அடங்காது.

உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணராத ஒரு தலைமுறை, தேசத்தில் இருந்து வந்தவர் அவர். தேசம் மாறும். அவர் மாறமாட்டார்.

இங்கே விதியும் குணமும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. நாடு ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்தபோது மகுடத்தை ஏற்பது அவருடைய விதி. ஆனால் ராணி தனது பாரம்பரியத்தை விரும்புவது, தொன்றுதொட்டு நடக்கும் பழக்கங்கள், மாற்றத்தை விரும்பாதது ஆகியவை பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அவருடைய இதயம் கிராமப்புறங்களில் அவரைப் போலவே குதிரைகள், நாய்கள் விலங்குகளை நேசிப்பவர்களில் மத்தியில் தமக்கான இடத்தை நோக்கி இருந்தது.

"மக்கள் வாழ்க்கை முழுவதுக்குமான வேலையைத் தேர்வு செய்வதில்லை. மாறாக எப்போதும் வெவ்வேறு வேலைகளுக்கு மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விஷயங்களில் ஒன்று என்பதை நான் காண்கிறேன்" என்று 1980-களில் அவர் கூறினார்.

QUEEN
படக்குறிப்பு, கிராமங்கள் மீது வாழ்நாள் முழுவதும் காதல் - வின்ட்சர் கிரேட் பூங்காவில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி ஆன் ஆகியோருடன் 1956-ஆம் ஆண்டில், இளவரசர் பிலிப்புடன் 1972 இல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் உள்ள ஒரு பண்ணையில்

அரண்மனை கதவுகளுக்கு அப்பால், மாற்றத்தின் சூறாவளி பிரிட்டனை அதிரடியாகப் புரட்டிக் கொண்டிருந்தது. பிரிட்டன் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணத்தில் அவர் அரியணைக்கு வந்தார். நாடு போரில் வெற்றி பெற்றது - ஆனால் சோர்வுற்றது. நாடு உலகளாவிய, ராணுவ அல்லது பொருளாதார வல்லரசாக அப்போது இல்லை.

தொழிற்சங்கங்களின் எழுச்சி, கூட்டுச் சேவைகளை வழங்குதல், உலகளாவிய நலன்புரியும் அரசை உருவாக்குதல் போன்றவை அரசு மற்றும் பொருளாதார அமைப்பில் கடலளவு மாற்றத்துக்கு அடிகோலின.

அவருடைய ஆட்சி படிப்படியாக நகர்ந்தபோது, பழைய ஒழுங்குகளைக் கொண்ட தேவாலயம், பிரபுத்துவ நடைமுறை, வர்க்க பேதம் போன்றவை நொறுங்கின. பொருளாதார வெற்றி, புகழ் போன்றவை பிறப்பால் நிர்ணயிக்கப்படும் தகுதியை முந்தின.

நுகர்வோர் பொருட்களான குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிகள், துடைப்பான்கள் போன்றவை வீடுகளையும் சமூக வாழ்க்கையையும் மாற்றின. பெண்கள் பணியில் சேர்ந்தனர்; பழைய தொழிலாளர் வர்க்க சமூகங்கள் அவர்கள் குடியிருந்த சேரிகளுடன் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த, ஒரே மாதிரியாக வாழ்ந்த சமூகம் நகரக்கூடியதாகவும், பிரிந்து-தனித்து வாழக்கூடியதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் பழைய விசுவாசங்களில் இருந்து விலகியதாகவும் மாறியது.

அரண்மனையிலும் சில மாற்றங்கள் நடந்தன. மதிய, இரவு உணவுக்கு புதிய முகங்கள் அரண்மனைக்கு வந்தன. தொலைக்காட்சியின் வருகையால் ராணியையும் அவரது வாழ்க்கையையும் பிரிட்டன் மக்கள் பார்க்க முடிந்தது. முதலில் கிறிஸ்துமஸ் ஒளிபரப்பின் மூலமும் பின்னர் 1960களின் பிற்பகுதியில் ஒரு முழு நீள ஆவணப்படத்தின் மூலமும் இது சாத்தியமானது.

ஆனால் இந்த change என்ற மாற்றமானது ஆங்கிலத்தில் சிறிய "c" -ஐக் கொண்டது. அதாவது அடிப்படையில் மாற்றம் இல்லை என்று கூறலாம். அரியணையில் ஏழாவது தசாப்தம் முடிவடையும் போதும், ​​முடியாட்சியின் பழக்க வழக்கங்கள் தொடக்கில் இருந்ததைப் போன்றே இருந்தன. அவருடைய தந்தையோ, தாத்தாவோ கூட இந்த நடைமுறைகளைக் கண்டால் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு சாண்ட்ரிங்காமில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம், வின்ட்சரில் ஈஸ்டர் பண்டிகை, பால்மோரலில் நீண்ட கோடை விடுமுறை, பாதுகாவலர்கள் மாற்றம் (Change of Guards), அலுவல்பூர்வமாக இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம், குதிரைப் பந்தயம், மாவீரர் ஞாயிறு போன்றவை இன்னும் அப்படியே இருக்கின்றன.

QUEEN
படக்குறிப்பு, கால மாற்றம் - 1969-இல் லண்டன் சுரங்க ரயிலில் பயணம், 1967-இல் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் உரை

சுற்றிலும் மாற்றங்கள் நடந்து அந்த அழுத்தம் அரண்மனைக்குள் நுழைந்தபோது அதை அவர் எதிர்த்தார். நாடு மாற்றத்தின் உச்சியில் நிற்கும்போது முடிசூடிக் கொள்வதும், மாற்றம் அரண்மனையைச் சுற்றி வரும்போது ஆட்சி செய்வதும்தான் அவருடைய விதி. அவர் எதனுடனும் மாறமாட்டார், நாகரிகத்துக்கு வளைந்து கொடுக்கமாட்டார் என்பது அவருடைய குணம். அவருடைய அந்த எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அதுவே அவருடைய குடும்பம் பிரிந்து அவருக்கு மிகப்பெரிய சோதனைக்கும் நெருக்கடிக்கும்கூட வழிவகுத்தது.

அவருக்கு மணிமுடிக்கு அடுத்துதான் குடும்பம். அவருடைய முதல் இரண்டு குழந்தைகளான சார்ல்ஸ், ஆன் ஆகிய இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த காலகட்டத்தில், ராணியும் அவரது கணவரும் ஆறு மாத கால உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது தனித்து விடப்பட்டனர். இதேபோல்தான் அவரும் அவரது சகோதரி மார்க்கரெட்டும் குழந்தைகளாக இருந்தபோது அவர்களது பெற்றோரால் தனித்து விடப்பட்டனர்.

அவர் உணர்ச்சி இல்லாத தாய் அல்ல. ஆனால் அவர் மாறுபட்டவர். மணிமுடியும் அதன் பொறுப்புகளும் அவருக்கு 25 ஆனபோதே வந்துவிட்டன. அதை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டார். குழந்தைகளைப் பற்றிய முடிவுகள் பெரும்பாலானவை கணவரே எடுக்க வேண்டியிருந்தது.

அவருடைய நான்கு குழந்தைகளின் திருமணங்களில் மூன்று விவாகரத்தில் முடிவடைந்தன. அவர் திருமணத்தை நம்பினார். அது அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு பகுதி. சமூகத்தை ஒன்றாகப் பிணைப்பது பற்றிய அவருடைய புரிதல் அது. "விவாகரத்தும் பிரிவும் இன்று நம் சமூகத்தில் உள்ள சில கொடூரத் தீமைகளுக்கு காரணம்," என்று அவர் ஒருமுறை கூறினார்.

1940-களில் இதே பார்வைதான் பலருக்கும் இருந்தது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அது நெகிழ்வடைந்து மாறியது. எந்த பெற்றோரும் தங்கள் குழந்தையின் திருமணம் தோல்வியில் முடிவதைக் கண்டு மகிழ்வதில்லை. யார்க் கோமகள் ஆன் மற்றும் கோமகன் பிலிப்ஸ் ஆகியோர் மண வாழ்க்கையில் இருந்து பிரிந்ததையும், இளவரசி டயானா, சார்ல்ஸ் ஆகியோரின் பிரிவையும் கண்ட 1992-ஆம் ஆண்டை "துயரமான ஆண்டு" என்று ராணி அறிவித்தார்.

அது "அவரது வாழ்க்கையில் ஒரு தாழ்வான நிலை" என்று ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் எழுதினார். கடினமான தருணம் குறித்து பொதுவெளியில் கூறியதற்காக அல்ல, "தாராளமனமின்மை, ஏளனம் ஆகியவை அவரது 40 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் சேர்க்கப்பட்டதால் அது தாழ்வான நிலை ஆனது."

அரியணையில் அவரது முதல் தசாப்தம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வியப்பாகக் கடந்துவிட்டது. சர்வதேச சுற்றுப்பயணங்களில் அவரைக் காண ஏராளமான மக்கள் குவிந்தனர். நாட்டில் சிலர் புதிய எலிசபெத் சகாப்தம் தொடங்கிவிட்டதாகவும் அறிவித்தார். ஆனால் அதை புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டார் ராணி.

QUEEN
படக்குறிப்பு, குடும்பத்துக்கான நேரம், தனிப்பட்ட இழப்பு - 1972-இல் இளவரசர் பிலிப் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளுடன்,1992-இல் வின்ட்சர் கோட்டையில் ஏற்பட்ட தீவிபத்து சேதத்தைப் பார்வையிடுதல்.

1960-களில் சூழல் சற்று தணிந்திருந்தது. ராணி தனது குடும்ப நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். புதிய ராணி என்ற காலம் கடந்துவிட்டது, போருக்குப் பிந்தைய குழந்தைகள் பெரியவர்களாக, அவர்களின் பெற்றோர்களைக் காட்டிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டிருந்தவர்களாக வளர்ந்தனர். 1970-கள் மற்றும் 80-களில் ராணியின் சேவையில் எந்தத் குறையும் காணப்படவில்லை. ஆனால் சில அரச குடும்ப ஆர்வலர்கள், ஊடகங்களின் கவனம் அவரை விட்டுவிட்டு அவரது குழந்தைகளையும் அவர்களது திருமணங்களையும் நோக்கித் திரும்பியது.

1990-களின் மத்தியப் பகுதியில் மக்களின் மனநிலையுடன் முடியாட்சிக்குத் தொடர்பு இல்லாதது போலத் தோன்றியது. செய்தித் தாள்களின் தலையங்கங்கள் ராணியை நேரடியாக விமர்சனம் செய்யத் தொடங்கின. முடியாட்சியின் எதிர்காலம் பற்றிக் கருத்துக் கூறின. அவருடைய ஆட்சி வேறொரு பழைய சகாப்தத்துடன் தொடர்புடையதாகவே தோன்றியது. புதிய பிரிட்டனிலும் டோனி பிளேயர் போன்றோர் ஏற்றுக் கொண்ட புதிய முறைசாராப் பணியிலும் ராணியின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. தொழிலாளர் கட்சியின் பிரமாண்ட வெற்றியினால் எழுந்த மாற்றத்துக்கான கோரிக்கையில் அரண்மனை எப்படிப் பொருந்தியது?

தொழிலாளர் கட்சி பெற்ற வெற்றிக்கு சில மாதங்களுக்குப் பிறகு பாரிஸ் நகரில் இருந்து வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணச் செய்தி வந்தது. கென்சிங்டன் அரண்மனைக்கு முன்னால் மலர்களால் வேயப்பட்ட கம்பளம் விரிந்தது. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மேலே இருந்த கொடிக் கம்பம் வெறுமையாகக் காணப்பட்டது. தேசத்தில் பலர் இளவரசியின் இறப்பில் தங்களைத் தாங்களை தனிமையாக உணர்ந்தனர்.

"உங்கள் அக்கறையை எங்களுக்குக் காட்டுங்கள், மேடம்" என்றது டெய்லி எக்ஸ்பிரஸ் தலைப்புச் செய்தி. "எங்கள் ராணி எங்கே? அவரது கொடி எங்கே?" என்று சன் எழுதியது. ஐந்து நாட்கள், ராணி பால்மோரலில் தங்கியிருந்தார். நாட்டின் பிற பகுதியில் ஏற்படும் கொதிப்பு எட்டாத இடம் அது. ஒருவேளை, அது இளம் இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரியைப் பாதுகாத்து ஆறுதல்படுத்துவதற்காக இருக்கலாம்.

ஆனால் அவரது குணாதிசயத்தைப் பொறுத்தவரை, மாற்றத்தின் மீதான அந்த ஆழ்ந்த வெறுப்பே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு காரணம் என்பது போல் தோன்றுகிறது; வழக்கப்படி பால்மோரல் விடுமுறையை இடையில் குறுக்கிடக்கூடாது, பக்கிங்ஹாம் அரண்மனையிலில் அவர் இல்லாத நேரத்தில் எந்தக் கொடியும் பறக்கக்கூடாது, அரண்மனையின் ராயல் ஸ்டான்டர்ட் கொடி ஒரு போதும் அரைக் கம்பத்தில் பறக்காது.

அந்த நேரத்தில் அவர் எடுத்தது மோசமான முடிவு. அவர் லண்டனுக்கு வந்து அரண்மனைக்குத் திரும்பினார். சுற்றிலும் குவிந்து கிடக்கும் பூக்களைப் பார்த்து நின்றார். அவர் காரை விட்டு இறங்கியபோது அவரை கேலி செய்யப்பட மாட்டார், சீண்டப்பட மாட்டார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை," முன்னாள் அதிகாரி ஒருவர் வாழ்க்கை வரலாற்றாசிரியரிடம் கூறியிருக்கிறார்.

QUEEN
படக்குறிப்பு, மகிழ்ச்சியும் சோகமும்: 1981-இல் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது அப்போதைய வருங்கால மனைவி லேடி டயானா ஸ்பென்சருடன் ராணி. 1997-இல் வேல்ஸ் இளவரசி டயானா இறந்ததைத் தொடர்ந்து இளவரசர் பிலிப்புடன் மலர் அஞ்சலி செலுத்தும் ராணி

முதலில் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்த மறுத்தார். பிறகு நேரலையில் பேச ஒப்புக்கொண்டார். பிபிசி ஆறு மணி செய்திக்கு சற்று முன்பு அவர் நாட்டு மக்களிடம் பேசினார். அவர் தயாராவதற்கு போதிய நேரம் இல்லை.

அவரது உரையில் எந்தக் குறைபாடும் இல்லை. பேச்சு சுருக்கமானது என்றாலும் கச்சிதமாக இருந்தது. "கற்க வேண்டிய பாடங்கள்" பற்றி பேசினார்; அவர் ஒரு "பாட்டியாக" பேசினார்; டயானாவின் நினைவைப் "போற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

இது ஒரு வெற்றி. ஒரு நெருக்கடியின் மத்தியில் இருந்து அரச குடும்பம் தப்பித்தது. அரச குடும்பத்தைச் சுற்றியும், அரண்மனையைச் சுற்றியும், முடியாட்சியைச் சுற்றியும் விஷயம் தூவப்பட்டிருந்தது. ராணியின் ஆட்சியில் ஒரு முறை - ஒரே ஒரு முறை - விதியும் குணமும் பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்துடன் மோதிக் கொண்டன.

ஆனால் அவை ராணியின் உலகளாவிய பங்களிப்பில் மகிழ்ச்சியாகவே இணைந்திருக்கும். இறப்பதற்கு முன் பல ஆண்டுகளாக அவர் சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் பல தசாப்தங்களாக அவர் ஓர் உலகளாவிய பிரபலமாக மட்டுமல்லாமல், செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்திருக்கிறார்.

தொலைக்காட்சி அவரது பிம்பத்தை அனைவருக்குமானதாகவும் சுற்றுப்பயணங்களை வீட்டில் இருந்தபடியே பார்க்கும்படியும் மாற்றுவதற்கு முன்பான அவரது ஆட்சியின் முதல் தசாப்தத்துடன் அதற்கு பிந்தைய காலகட்டம் எதையும் ஒப்பிட முடியாது. 1954-ஆம் ஆண்டில் அவரது நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அவரைப் பார்க்க வந்ததாகக் கருதப்படுகிறது; 1961இல் இரண்டு லட்சம் மக்கள் விமான நிலையத்திலிருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு செல்லும் சாலையில் வரிசையாக நின்றனர்; கல்கத்தாவில் 35 லட்சம் மக்கள் வழிநெடுகக் காத்திருந்தார்கள்.

பேரரசின் நீண்ட அந்திமக் காலத்தை காண வேண்டும் என அவருக்கு விதியிருந்தது. ஒரு முறையல்ல பல முறை பேரரசின் கொடி இறக்கப்பட்டு, கடைசியாக தேசிய கீதம் இசைக்கப்படும் நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

தலைநகரிலும் நாடு முழுவதும் உள்ள அரண்மனைகளிலும் அவரது ரத்த உறவுகள் வாழ்ந்தனர். உலகம் முழுவதும், சிறிய, பெரிய, ஏழை, பணக்கார, குடியரசு, முடியாட்சி நாடுகளில் அவரது அதிகார உறவு பரவியிருந்தது.

அன்றைய அரசாங்கத்தின் சார்பாக சர்வதேச சுற்றுப்பயணங்கள் திட்டமிடப்பட்டன. அவை வெளியுறவுக் கொள்கையின் கருவிகளாக இருந்தன. வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ராணியின் செல்வாக்கு பிரிட்டனுக்கும் அவர் சென்ற இடங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு நன்மை பயக்கும் என்ற புரிதலின் அடிப்படையில் அவை மேற்கொள்ளப்பட்டன.

அவரது பயணங்கள் கவர்ச்சிகரமாக இருந்தன. விமானப் பயணங்கள் சாமான்ய மக்களுக்கு எட்டாத வரை, அரசப் படகு, ராணியின் விமானம், விருந்துகள் போன்றவை அசாதாரண அனுபவங்களாக இருந்தன. ஆனால் அது எப்போதும் கடின உழைப்பு, ஓய்வில்லா நெடிய நாட்கள், வாரங்கள், வரவேற்புகள், கண்காட்சிகள், திறப்பு விழாக்கள், அதிகாரிகளுடன் மதிய உணவுகள், அரசுமுறை இரவு உணவுகள், உரைகள் போன்றவை பொறுமையாக மேற்கொள்ளப்பட்டன. அரச சுற்றுப்பயணத்தை கவனித்தவர்கள், அதன் நடு நாயகமாக இருப்பவருக்கு அதில் வேடிக்கையாக ஏதும் இருக்கும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

QUEEN
படக்குறிப்பு, ஒரு உலகளாவிய பங்களிப்பு - 1965-ஆம் ஆண்டில் நைல் நதி தொடங்கும் அருவியில் எத்தியோப்பிய பேரரசர் ஹெய்லி செலாசியுடன். 1979-ஆம் ஆண்டில் பஹ்ரைன் மன்னருடன்

அவர் பிரிட்டனுக்கு வெளியே ஓய்வு எடுப்பது என்பது மிக அரிது. வெளிநாட்டுக்குப் பயணம் செய்தால் அது வேலை என்றுதான் பொருள். அவரது வெளிநாட்டுப் பயணங்கள், அவர் சென்ற இடங்களுடனான பிரிட்டனின் உறவில் படிநிலை மாற்றங்களைக் குறிக்கும். உதாரணத்துக்கு 1965-ஆம் ஆண்டில் போருக்குப் பிந்தைய ஜெர்மனிக்கு சென்றது. 1986- இல் தாராளமய சீனாவுக்கு சென்றது; ஒரு காலத்தில் தனது உறவினர்களைக் கொன்று, ஆட்சியைக் கவிழ்த்த ரஷ்யாவுக்கு 1994- இல் மேற்கொள்ளப்பட்ட பயணம்.

1995-இல் நிறவெறி ஒழிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட பயணம், "என் வாழ்க்கையின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று" என்று அவர் கூறுவார். "நமது வரலாற்றில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று" என்று அதிபர் நெல்சன் மண்டேலா இதற்குப் பதிலளித்தார்.

ஆனால் 2011-இல் அயர்லாந்திற்கு அவர் மேற்கொண்ட பயணத்தைப் போல வேறு எந்தப் பயணமும் உறவில் ஏற்பட்ட மாற்றத்தை குறிக்க முடியாது. அவரது தாத்தா 1911-இல் சென்றபோது அயர்லாந்து தீவு, ஒன்றாக, கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் பகுதியாக இருந்தது. வன்முறை கிளர்ச்சி, பிரிவினை மற்றும் விடுதலை ஆகியவை அதனைத் தொடர்ந்து நடந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 30 ஆண்டுகள் பிரிவினைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு புறங்களிலும் நடந்தன. பிரிட்டிஷ் அரசு அதை கொடூரமான வழிகளில் ஒடுக்கியது.

பிரிட்டனையும் அயர்லாந்தையும் பிரிக்கும் நீரிணைக்கு இரு புறமும் அவநம்பிக்கை இருந்ததால், ராணியின் பயணத்துக்கு சரியான நேரம் அமையவில்லை. புனித வெள்ளி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, அதிகாரப் பகிர்வு சட்டமன்றத்தை நிறுவியதன் மூலம் சிக்கல் முடிவுக்கு வந்தது.

ராணியின் பல பிரதமர்களுக்கு அயர்லாந்து மோசமான தொடர்புகளைக் கொண்டது. ராணியின் முதல் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் முதல் போரிஸ் ஜான்சன் வரைக்கும் பலருக்கும் இது பொருந்தும்.

பிரதமர்கள் அனைவருக்கும் ராணியின் கூர்ந்து கேட்கும் திறன், அவரது அனுபவம், பிரிட்டிஷ் மற்றும் உலக வரலாறு பற்றிய அவரது பார்வை ஆகியவற்றின் மூலமான பலன் கிடைத்தது. வாரந்தோறும் அவர் பிரதமருடன் உரையாடுவது எந்தத் தனிப்பட்ட காரணத்துக்காகவும் அரசின் முடிவுகளை மாற்றுவதற்காகவும் அமைந்ததில்லை. அறிவுரை கூறவும், ஊக்கப்படுத்தவும், எச்சரிக்கவுமே அவர் இருந்தார்.

கேட்பதற்காகவே ராணி இருந்தார். பிரதமர்கள் அவரிடம் சொன்னது எதுவும் வெளியே செல்லாது என்ற முழு நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் சுதந்திரமாகப் பேசக்கூடிய ஒரு நபர் அவர்தான். அவர் அரசு இயந்திரத்தை உண்மையிலேயே புரிந்து கொண்டிருந்தார். பல பிரதமர்களுக்கு ராணியைச் சந்திப்பது ஒருவகையில் நிம்மதியைத் தந்தது. தனது சகாக்களைப் பற்றியோ, எதிரிகளைப் பற்றியோ அவர்கள் அங்கே நினைக்க வேண்டியதில்லை. வெளியில் பேசுவது போன்று கட்டுப்படுத்திக் கொண்டு பேச வேண்டிய அவசியமும் இல்லை.

"அவர்கள் என்னிடம் வந்து தங்கள் சுமையைக் குறைக்கிறார்கள் அல்லது என்ன நடக்கிறது என்று என்னிடம் சொல்கிறார்கள்" என்று அவர் கூறினார். "அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், சில சமயங்களில் ஒருவர் அந்த வகையிலும் உதவலாம். அது ஒரு வகையான பஞ்சு போன்றது என நான் நினைக்கிறேன்"

ஒரு நாளைக்கு சுமார் மூன்று மணிநேரம் அவர் வெளியுறவு அலுவலக தந்திகள், நாடாளுமன்ற அலுவல் பற்றிய அறிக்கைகள், அமைச்சர்களின் குறிப்புகள் ஆகியவற்றைப் படித்தார் என 1970-களில் ஒரு தனிச் செயலர் குறிப்பிட்டார்.

அவர் படிப்பதை நினைவில் வைத்திருந்தார். சில சமயங்களில் பிரதமர்களை தனது நினைவாற்றலின் வியப்படையச் செய்தார். "செய்திகள் மற்றும் தந்திகளில் அனுப்பப்பட்ட அனைத்து விவரங்களையும் மாட்சிமை பொருந்தியவரின் நினைவில் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்" என்று ஹரோல்ட் மேக்மில்லன் எழுதினார்.

QUEEN
படக்குறிப்பு, அரசியல் ரீதியாக நடுநிலை, ராஜீய ரீதியில் பலன்: 1985-ஆம் ஆண்டில் முன்னாள் மற்றும் அப்போதைய பிரதமர்களுடன், 1983-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன்

அவர் அரியணைக்கு வரும்போது முடியாட்சியின் அரசியல் பங்களிப்பு என்பது ஏறக்குறைய எதுவுமில்லை. இரண்டே இரண்டு விருப்பங்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருந்தன. ஒன்று அரசாங்கம் அமைப்பதற்கு யாரை அழைப்பது என்பதை முடிவு செய்யலாம். நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட வேண்டும் என்று கூறலாம்.

அவரது ஆளுகையின் தொடக்க காலத்தில், பொதுத் தேர்தல்களுக்கு இடையே பிரதமர் ராஜிநாமா செய்தபோது, அரசமைக்க யாரை அழைக்கலாம் என்ற முடிவை அவர் எடுத்தார். அது கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு முந்தையது.

ஆனால் கன்சர்வேடிவ்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிய பிறகு அந்த வாய்ப்பு ராணிக்கு இல்லை. கடந்த பல தசாப்தங்களாக அரசியல் நடவடிக்கைகளில் அரண்மனை ஈடுபடுவது அன்னியமாகவே மாறிவிட்டது. உறுதியான வெற்றி யாருக்கும் கிடைக்கவில்லை என்றால், அரசமைக்க யாரை அழைப்பது என்ற முடிவை அரண்மனை எடுப்பதில் இருந்து தவிர்ப்பதற்கான பேச்சுகள் எழுந்தன.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதை மறுக்க ராணிக்கு எப்போதும் காரணம் இருந்தது இல்லை. அப்படிச் செய்தால் அது அசாதாரணமாக இருந்திருக்கும். தனக்குரிய பாத்திரத்தை அவர் புரிந்து கொண்டிருந்தார்.

அரண்மனையின் அரசியல் தொடர்பான குரல்களும் மவுனமாகவே இருந்தன. கன்சர்வேடிவ்களை விட தொழிலாளர் கட்சி பிரதமர்களுடன் அவர் நன்றாகப் பழகினார் என்று ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். மார்கரெட் தாட்சருடனான சமூக முரண்களுக்கு மத்தியிலும் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றார். அது அதற்கு முன் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மட்டுமே கிடைத்தது.

1980 களின் முற்பகுதியில் வேலையின்மை அதிகரித்தது, பெரிய நகரங்களில் கலவரங்கள் வெடித்தன, பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டது, சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இவற்றால் சமூகங்கள் எதிரெதிராக நின்றன. பிரிட்டனின் தொலைநோக்கு முடிவுக்கு வந்தது.

1986 இல் அரண்மனை செய்தியாளர் அதிகாரி ஒருவர் சண்டே டைம்ஸுக்கு அளித்த அதீத உற்சாகமான விளக்கத்தில் அரசின் கொள்கைகள் குறித்து ராணிக்கு அதிருப்தி இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது. பெரிய அளவில் பிளவுபட்ட, மாறுபட்ட தேசத்தை ஒன்றிணைப்பதே தனது கடமைகளில் ஒன்று என்று நம்பிய ஒரு அரசத் தலைவரின் சுருக்கமான பார்வை இது.

1970 களில் ஒருமுறை மற்றும் 2014 ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்கு சற்று முன்பு ஒருமுறை என இரண்டு முறை ஸ்காட்லாந்து விடுதலை பற்றிய விவாதத்தில் அவர் நுழைந்தார். இதுவும் தீவிரமான அரசியலா? சில தேசியவாதிகளைப் பொறுத்தவரை, ஆம். ஆனால் தனது ராஜ்ஜியத்தை உடைப்பது குறித்து முடிவு செய்யத் தயாராகி வருபவர்களிடம் அவர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் வியப்பு ஏதும் இல்லை.

அவரது பழமைவாத குணமே அவரது அரசியல் நடவடிக்கைகளை வழிநடத்தியதா? ஒருவேளை அப்படியிருந்தாலும், அது ஓரளவுக்குத்தான். ஆனால் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கடைசி மன்னர் அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ். ராணி அரியணை ஏறிய நேரத்தில், அரசியல் தலையீட்டுக்கான அவசியமே இல்லாமல் போய்விட்டது. ஒருவருக்காக மற்றொருவர் கோருவது போன்ற மறைக்குறியீடாகவே அவரது பாத்திரம் அமைந்துவிட்டது. அவர் தொடக்கத்திலேயே இதைப் புரிந்து கொண்டிருப்பார். விதியும் குணமும் கைசேர்த்து நடந்தன.

அரச தலைவர் என்ற அடிப்படையில் எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காமல், நாகரிகத்தின் போக்கில் முடியாட்சியின் மரபை வளைக்காமல் உறுதியாக இருந்ததால், நாட்டின் தலைவராக பலரது அன்பையும் மரியாதையையும் பெறக்கூடிய வகையில் அவரால் வெற்றி பெற முடிந்தது.

நவீனகால முடியாட்சியில் இது எழுதப்படாத மிகப்பெரும் பாத்திரம். பாரம்பரியத்தால் பாதுகாக்கப்படாத, முன்னுதாரணங்கள் ஏதுமற்ற, ஓர் ஆட்சியை தன்னுடைய குணாதியத்தால் மட்டுமே அவரால் இயக்க முடிந்தது.

QUEEN
படக்குறிப்பு, சம்பிரதாயமாகவும் இயல்பாகவும்- 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொடக்க உரைக்குச் செல்லும் வழியில், 2014-ஆம் ஆண்டில் இளவரசர் பிலிப்புடன்.

அவரது தாத்தா தேசத்தை ஆட்சி செய்வதற்குப் பதிலாக சேவை செய்யும் ஒரு முடியாட்சிக்கு அடித்தளம் அமைத்தார். ஆனால் வானத்தில் இருந்து பறவைகளை பறக்கச் செய்வதிலேயே தனது நேரத்தை செலவிட்டார். அவரது தந்தையின் ஆட்சி விதிவசமாக அவருக்கு வந்து சேர்ந்தது. திடீரென எதிர்பார்க்காத வகையில் அவர் மன்னரானார். அவர் மன்னராக இருந்த காலத்தில் அதிகநேரம் ராணுவச் சீருடையே அணிந்திருந்தார்.

1990களில் கடுமையான விமர்சனத்துக்குப் பிறகு முடியாட்சியின் பெருமை மீண்டும் உயர்ந்தது. அரசியல் மாற்றத்துக்கான நம்பிக்கையால் ஏமாற்றப்பட்டதால், அரசியல் தலைவர்கள் கேலி செய்யப்பட்டதால் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ராணி நாட்டின் அழியாத தொடர் வரலாற்றின் சின்னமாக மாறினார்.

முடிவில்லாத பொறுமை, பொதுவெளியில் உணர்ச்சிவயப்படாத தன்மை, தனது சொந்த எண்ணங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்த்தது, வலது-இடது என எந்தப் பக்கமும் சாயாதது போன்றவற்றுக்காக தேசம் அவருக்கு அளித்த வெகுமதி இது.

அவர் பொதுவாகவே எல்லாவற்றிலும் இருந்து விலகியே இருந்தார். இது அதிகாரப் படிநிலை காரணமாக அல்ல. உண்மையில் மேம்போக்கான நவீன வாழ்க்கையின் அன்றாடப் பணிகளில் அவர் ஒருபோதும் ஈடுபடுத்திக் கொண்டதே இல்லை.

மன்னராட்சியின் மரபுகள், சடங்குகள், பிறப்புகள், திருமணங்கள், இறப்புகள் போன்றவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டிருந்தார். தேசிய வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் வெளிப்படையான நோக்கம் இருக்க வேண்டியதில்லை என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். இடைவிடாத மாற்றம் கொண்டிருந்த ஒரு பழமைவாத தேசத்திற்கு, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தொடர்ச்சிக்கு அளவில்லாத மதிப்பு இருந்தது.

பல தசாப்தங்களுக்கு முன்னர் தனது வயதிற்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வுடன், சேவை வாழ்க்கைக்கு சபதம் ஏற்ற அவர், மன்னராட்சியை தன் தேசம் நேசிக்கும் பலவற்றின் தொகுப்பாக மாற்றினார்.

அவரால் அதைச் செய்ய முடிந்ததற்குக் காரணம், அவருடைய குணாதிசயங்கள் பிரிட்டிஷ் மக்கள் தங்களுக்குள் சிறந்தவர்கள் என்று நினைக்கும் பலரைப் பிரதிபலிப்பதாக இருந்தன. அடக்கமான, புகார் கூறாத, சிக்கனமான, புத்திசாலித்தனமான, குழப்பமற்ற, ஒரு பெருஞ் சிரிப்புடன் கூடிய நகைச்சுவை உணர்வு கொண்ட, மெதுவாகவே கோபம் கொள்கிற, எப்போதும் நன்னடத்தை கொண்டவர் என மக்கள் அவரைக் கண்டனர்.

"நான் தரநிலைகளின் கடைசி கோட்டை" என்று அவர் ஒருமுறை கூறினார். அதாவது அவர் மற்றவர்களை விட சிறந்த நடத்தை அல்லது நேர்த்தியான பழக்கம் பற்றி பெருமை பேசவில்லை. அவர் தன் பாத்திரத்தையும் வாழ்க்கையையும் விவரித்தார். அவரது வாழ்க்கையும் பணியும் பிரிட்டனில் சிறந்ததாக அமைந்தது. அதுவே அவர் செய்த சேவை.

QUEEN

பட மூலாதாரம், CHRIS LEVINE/ JERSEY HERITAGE TRUST