You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூர் பிரதமர் நேருவை பாராட்டியதால் சர்ச்சை; தூதரக அதிகாரியிடம் விளக்கம் கேட்ட இந்தியா
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பாராட்டிப் பேசியிருப்பது இந்தியாவில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் 'கிரிமினல் எம்பிக்கள்' இருப்பதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரக உயர் அதிகாரி சைமன் வாங்-கிடம், சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டறிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் பேசும் வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிரும் காங்கிரஸ் தலைவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நேருவை தேவையின்றி விமர்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங், "பெரும்பாலான நாடுகள் நிறுவப்பட்டு, உயர்ந்த லட்சியங்கள் மற்றும் உன்னத மதிப்புகளின் அடிப்படையில் பயணத்தைத் தொடங்குகின்றன. பெரும்பாலும் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முன்னோடி தலைமுறைக்கு பிறகு படிப்படியாக அவை மாறுகின்றன" என்று கூறினார்.
இஸ்ரேலையும் லீ தனது பேச்சின் போது குறிப்பிட்டார். நேரு மற்றும் பென் குரியன் ஆகியோரைப் பாராட்டினார். அவர்களைப் போன்ற தலைவர்கள் சிங்கப்பூரிலும் இருந்தார்கள் என்று பேசினார்.
"ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையில் கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன, அவை அரசியல் ரீதியானவை என்று கூறப்பட்டாலும்கூட" என லீ கூறினார்.
"இதே பாதையில் சிங்கப்பூர் பயணிப்பதைத் தடுக்க வேண்டியது முக்கியமானது" என்றும் அவர் பேசினார்.
லீயின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து, நரேந்திர மோதி தலைமையிலான அரசை விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தொடர்பான இந்திய வெளியுறவுத் துறை, சிங்கப்பூர் தூதரிடம் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிற செய்திகள்:
- நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இளம் பேய் சுறா
- திருச்சி மாநகராட்சியை வெல்லப் போவது யார்? - பிபிசியின் கள ஆய்வு
- இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு கேரளாவின் இளம் எம்.எல்.ஏவுடன் திருமண ஏற்பாடு
- உங்கள் வயிற்றுக்குள் வாழும் நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள்
- ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்