You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கச்சா எண்ணெய் உற்பத்தி தொடரும்; கார்பன் உமிழ்வையும் குறைப்போம்: சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான்
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சௌதி அரேபியா 2060ஆம் ஆண்டில் தமது நிகர கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளது.
ஒரு நாட்டிலிருந்து வெளியிடப்படும் கார்பனின் அளவு உறிஞ்சப்படும் கார்பனின் அளவு ஆகிய இரண்டுமே சரி சமமாக இருப்பது கார்பன் உமிழ்வின் நிகர அளவு பூஜ்ஜியமாக இருப்பதைக் குறிக்கும்.
இந்த இலக்கை அடைவதற்கு 180 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணத்தை சௌதி அரேபிய அரசு முதலீடு செய்யும் என்று அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் 13.5 லட்சம் கோடி ரூபாய்.
கார்பன் உமிழ்வுக்கு பெரும் பங்காற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியையும் அடுத்து வரும் தசாப்தங்களில் சௌதி அரேபியா தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் COP26 உச்சி மாநாடு மாநாடு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்பதற்கான தங்களின் திட்டத்தை வெளியிட்டு, புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர்.
தங்களது நாட்டின் மிக கார்பன் வெளியேற்றத்தின் நிகர அளவு பூஜ்ஜியம் ஆக இருக்கவேண்டும் என்று உறுதி ஏற்றுள்ள நூற்றுக்கும் மேலான நாடுகள் பட்டியலில் தற்போது சௌதி அரேபியாவும் சேர்ந்துள்ளது.
பசுமை இல்ல வாயுக்களை மேலதிகமாக ஒரு நாடு வளிமண்டலத்தில் உமிழாமல் இருக்கும் நிலை கார்பன் உமிழ்வு உங்களின் நிகர அளவு பூஜ்ஜியமாக இருக்கும் பொழுது உண்டாகும்.
இதை எட்டுவதற்கு ஒவ்வொரு நாடும் பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். முக்கியமாக வளிமண்டலத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைக்கவேண்டும்.
இது பெரும்பாலும் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் நடக்கிறது. அத்துடன் அதிக அளவில் மரங்களை நடுதல், வனப் பரப்பை அதிகரித்தல், வளிமண்டலத்தில் கார்பனைக் கலக்க விடாமல் தடுக்கும் கார்பன் - கேப்ச்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஒவ்வொரு நாட்டின் அரசும் ஈடுபட வேண்டும்.
2060ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வின் நிகர அளவைப் பூஜ்ஜியமாக்க சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், சௌதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் 2050ஆம் ஆண்டிலேயே நிகர பூஜ்ஜியம் எனும் அளவை எட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகில் கச்சா எண்ணெய் அதிகமாக தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
உலகிலேயே கார்பன்-டை-ஆக்சைடு அதிகமாக வெளியிடும் நாடுகள் பட்டியலில் சௌதி அரேபியா 10-வது இடத்தில் உள்ளது.
படிம எரிபொருள் பயன்பாடு மற்றும் உற்பத்தி மீதான தங்களது முதலீட்டை குறைக்க வேண்டும் என்று உலக நாடுகளின் கோரிக்கையை சௌதி அரேபியா பல்லாண்டு காலமாக கண்டுகொள்ளாமல் இருந்தது.
2030ஆம் ஆண்டுக்குள் , பசுமை இல்லை வாயுவான மீத்தேனின் உமிழ்வு தற்போதைய அளவில் இருந்து 30 சதவிகிதம் கட்டுப்படுத்தப்படும் என்றும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
பல நூறு கோடி மரங்களை நட்டு, புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டுக்கு மாறி கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவோம் துன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் சௌதி அரேபிய அரசு கூறியிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்