You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது?
- எழுதியவர், மணீஷ் பாண்டே
- பதவி, நியூஸ் பீட் செய்தியாளர்
உங்களுக்கு நெருக்கமான ஒருவர், தாங்கள் மன ஆரோக்கியத்துடன் போராடுவதாகவும், தங்கள் உயிரை போக்கிக்கொள்ள நினைப்பதாகவும் சொன்னால், அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது கடினமான ஒரு விஷயம்.
நீங்கள் என்ன சொல்வீர்கள் அல்லது செய்வீர்கள்?
கரோலைன் ஃப்ளாக் குறித்த ஆவணப்படம், சேனல் 4 இல் ஒளிபரப்பாகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்த தொலைக்காட்சி தொகுப்பாளரின் தற்கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை இந்தப்படம் ஆராய்கிறது.
தொகுப்பாளர் ரோமன் கெம்ப் தன்னுடைய மனநலம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஜோ லயன்ஸின் தற்கொலை பற்றியும், திங்களன்று, BBC Three documentary யில் மனம்திறந்து பேசினார்.
ஒருவர் தன்னுடைய சிரமங்களை மனம் திறந்து வெளிப்படுத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என Samaritans என்ற மன நல தொண்டு அமைப்பின் தன்னார்வலர் அலெக்ஸ் டோட்டிடம் பிபிசி கேட்டது.
தற்கொலை உணர்வுள்ளவர்களுக்கு அதிக கவனம் கொடுங்கள்
"நீங்கள் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாது. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று அலெக்ஸ் கூறுகிறார்.
"ஆனால் தற்கொலை எண்ணங்களைப் பற்றி யாராவது உங்களிடம் சொன்னால், அவற்றை எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்."
அவர்கள் தைரியமாக தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடிய மற்றும் உதவி கிடைக்கும் என்று அவர்கள் உணரக்கூடிய சூழலை அளிப்பது முக்கியம் என்று அலெக்ஸ் விளக்குகிறார்.
"ஆரம்ப தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, தான் உணர்வதைப்பற்றி பேசுவதுதான், மக்கள் செய்யக்கூடிய கடினமான காரியங்களில் ஒன்று ," என்கிறார் அவர்.
ஒருவர் பேசும்போது, நாம் நினைப்பதை சொல்வதற்காக குறுக்கிடுவது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் இருப்பது முக்கியம் என்று அலெக்ஸ் குறிப்பிடுகிறார்..
அமைதியாக இருங்கள், மதிப்பிடாதீர்கள்
இது "கடினமான விஷயங்களில் ஒன்று" குறிப்பாக இது ஒரு குடும்ப உறுப்பினராக இருக்கும்போது என்று அலெக்ஸ் விளக்குகிறார்.
"ஆனால் அவர்கள் மனதை திறக்க விரும்புகிறார்கள். அவர்களால் எதையும் பற்றி யோசிக்க முடியாது. முதலில் நீங்கள் அமைதியாக இருப்பது ஒரு நல்ல விஷயம்."
அவர்களை பேச அனுமதிப்பது மிகவும் முக்கியம். அவர்களை மதிப்பிடுவது போன்ற விஷயங்களை பற்றி அவர்களிடம் கேட்காதீர்கள்.
" 'உங்கள் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டால் அவர்கள் எப்படி உணருவார்கள்?' என்பது போன்ற கேள்விகளை கேட்டால், நீங்கள் அவர்களை மதிப்பிடுவதாக நினைத்துவிடுவார்கள்." "மனம் திறந்து பேசுவதை நிறுத்தி விடுவார்கள்"
வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள்
யாராவது அழைத்தால் அலெக்ஸ் செய்யும் முதல் விஷயம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு உதவவும் நான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்துகிறார். அவர்கள் மேலும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக அவர்களை வசதியாக உணரச்செய்யும் முயற்சி இது.
ஒருவரை பேச வைக்க வெளிப்படையான கேள்விகள் ஒரு சிறந்த வழியாகும். அதாவது: "நீங்கள் ஏன் இப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா? எது உங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது ?" போன்ற கேள்விகள்.
உதவி நெட்வொர்க்குகள் பற்றி கேட்பதும், இதற்கு முன்னால் அவர்கள் உதவி பெற்றுள்ளார்களா என்று கேட்பதும் சரிதான் என்று அவர் கூறுகிறார்.
அது எப்படி இந்த நிலைக்கு வந்தது என்பதையும், இதே போல இனி தொடர முடியாது என்று அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டறியலாம்."
ஆனால் எல்லா நேரத்திலும் கேள்விகளை மட்டுமே கேட்காதீர்கள்.
" உண்மையில் அவர்களைப் பேச அனுமதியுங்கள், அந்த மெளனத்தை அவர்களுக்கு அளியுங்கள். தங்கள் மன பாரத்தை கொட்டித்தீர்க்க அது உதவும்."
தேவைப்பட்டால் அரவணைத்து ஆதரவு கொடுங்கள்
நமது இயல்பான உள்ளுணர்வு யாரையாவது கட்டிப்பிடிப்பதாக இருக்கலாம் (கோவிட் கட்டுப்பாடுகள் அனுமதித்தால்). ஆனால் முக்கிய விஷயம் அவர்களை வசதியாக உணரச்செய்வது.
"சிலர் கட்டிப்பிடிக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகியே இருங்கள்." "ஆனால் நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தால், ஒரு அரவணைப்பு அல்லது அந்த நெருங்கிய தொடர்பு உதவும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கையைப் பிடிக்க பயப்பட வேண்டாம்."
"யாரோ ஒருவர் நமக்காக இருக்கிறார் என்பதை உடல் ரீதியாக அறிந்துகொள்ளும் பாலத்தை கட்டியெழுப்ப , மனித தொடர்பு அருமையானது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவர்களுக்கு மேலும் உதவியை சுட்டிக் காட்டுங்கள்
ஒரு மருத்துவரிடம் பேசுவது அல்லது உதவி எண்ணை அழைப்பது போன்ற அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு அலெக்ஸ் அறிவுறுத்துகிறார்.
ஆனால் யாராவது உடனடி ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் 999 ஐ அழைக்கலாம். "
ஆனால் இறுதியில், உதவி பெற அடுத்த நடடிக்கையையை எடுப்பது அந்த நபரின் முடிவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
" அவர்கள் மனம் திறந்து பேசும் செயலானது, அவர்கள் உதவி பெற விரும்புகிறார்கள், இதன் மூலம் பிரச்சனையை தீர்க்க விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்."
"உணர்வுகள் தற்காலிகமானவை. ஆகவே, 'இது எனது அடுத்த படி' என்று அவர்கள் சொல்லக்கூடிய இடத்திற்கு அவர்களை நாம் கொண்டு செல்லவேண்டும்."
பிற செய்திகள்:
- உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?
- கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின்
- பருமனான பெண்களுக்கு ப்ரா தயாரிப்பதில் புரட்சி செய்யும் பெண்
- செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்
- இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்