You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலெக்ஸே நவால்னி: "எனக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு புதினே காரணம்" - ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு மற்றும் பிற செய்திகள்
தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினே பொறுப்பு என்று தான் நம்புவதாக ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸே நவால்னி தெரிவித்துள்ளார்.
"இந்த செயலுக்குப் பின்னால் புதின் உள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேறு எந்த விளக்கமும் எனக்குத் தெரியவில்லை" என்று ஜெர்மனிய இதழான டெர் ஸ்பீகலுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் வந்தபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார். இதனால், ஓம்ஸ்க் நகரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, அவசரஊர்தி விமானத்தில் ஜெர்மனி அழைத்து வரப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளானதாக கண்டறியப்பட்ட அவர் சென்ற மாதம் கோமா நிலையிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பேட்டி வெளிவந்துள்ளது.
நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்கு தான் ஆளாக்கப்பட்டதாக நவால்னி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும், இதுதொடர்பாக அவருடன் சேர்ந்து சிஐஏ அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மானிய நேரப்படி, வியாழக்கிழமையன்று வெளிவந்துள்ள நேர்காணலில், நோவிசோக் நச்சு ரசாயனத்தை பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புதினுக்கு கீழே பணிபுரிபவர்கள்தான் என்றும் நவால்னி தெரிவித்துள்ளார்.
"ஒருவேளை அந்த நச்சு ரசாயனத்தை குறிப்பிட்ட மூன்று அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் பயன்படுத்த அதிகாரம் கொண்டிருந்தால் அது உலகுக்கே ஒரு அச்சுறுத்தல்" என்று 44 வயதாகும் நவால்னி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டாம்ஸ்க் விமான நிலையத்தில் நவால்னி அருந்திய தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பினர். பிறகு, நவால்னி முந்தைய இரவு தங்கியிருந்த விடுதியின் தண்ணீர் பாட்டில்களில் நச்சு ரசாயனத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டன.
ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்: தாமாக முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட 19 வயது பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளை, தாமாக முன்வந்து வியாக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
அந்த பெண்ணின் உயிரிழப்பு விவகாரத்திலும் விசாரணை நடவடிக்கையிலும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலாளர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
விரிவாகப் படிக்க: ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்: தாமாக முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம் - காவல்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்
இந்திய பிரதமருக்காக வந்தது புதிய போயிங் 777 விமானம்
இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில் ஒன்று வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தது.
அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர், துணை அதிபரின் வான் வழி பயணங்களுக்காக பிரத்யேக வசதிகளுடன் ஏவுகணை துளைக்காத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஏர் ஃபோர்ஸ் ஒன்று அழைக்கப்படுகின்றன.
விரிவாகப் படிக்க: ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமருக்காக வந்தது புதிய விமானம் - விலை எவ்வளவு தெரியுமா?
ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்
சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் - மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை - அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா.
கடந்த சில நாட்களாக உள்ளுர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த விடயம் தொடர்பான செய்திகளும், தகவல்களும் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
விரிவாகப் படிக்க: இலங்கை சுனாமி: ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் - மாறுபட்ட கதை
திருப்பூரில் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இளம்பெண்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: