You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் மற்றும் பிற செய்திகள்
எகிப்தில் உள்ள பழங்கால இடுகாடு ஒன்றில், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த 27 ஈமப்பேழைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 13 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
தற்போது மேலும் 14 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டதில், இது அதிக எண்ணிக்கையிலானது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, மரத்தாலான, நன்கு பாதுகாக்கப்பட்ட ஈமப் பேழைகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள சக்காரா 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இடுகாடாக உள்ளது.
விவசாய மசோதாக்கள் கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய மசோதாக்களில், இரண்டு மசோதாக்கள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்கள் அவையில் இன்று நிறைவேற்றப்பட்டன.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியவற்றுக்கான மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 இன்று வாக்கெடுப்புக்கு வரவில்லை.
விரிவாக படிக்க: விவசாய மசோதாக்கள் வாக்கெடுப்பில் அமளி: 'எதிர்க்கட்சிகள் எல்லை மீறி விட்டன' - இந்திய அரசு
நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரம் இருந்த மக்கள் பாதை அமைப்பினர் வலுக்கட்டாயமாக அகற்றம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வை நீக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடிவந்த மக்கள் பாதை அமைப்பினரை ஞாயிற்றுக் கிழமை காலையில் காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளது. தங்களை காவல்துறையினர் மோசமாக நடத்தியாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா
கடந்த சனிக்கிழமை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 19 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், தைவானை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகைத்தான் இந்த நடவடிக்கைகள் என எச்சரித்துள்ளது.
குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறா பேஸ்புக்?
உலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு தனியுரிமை சார்ந்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது.
விரிவாக படிக்க: குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை களவாடுகிறதா கூகுள், ஃபேஸ்புக்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :