You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்டு டிரம்ப்: 'கொரோனா தொற்றை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டார்'
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கொரோனா வைரஸ், காய்ச்சலைவிட எவ்வளவு மோசமான வைரஸ் என்பது அந்நாடு பாதிக்கப்படுவதற்கு முன்பே தெரிந்திருந்தும், நெருக்கடி நிலையை குறைத்து மதிப்பிடவே விரும்பினார் என புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.
வாட்டர்கேட் விவகாரத்தை வெளியே கொண்டுவந்த பத்திரிகையாளர் பாப் வுட்வர்ட், கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் வரை அதிபர் டிரம்ப்பை 18 முறை பேட்டி எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் முதல் மரணம் நிகழ்வதற்கு முன்பே, அதிபர் டிரம்ப், இந்த வைரஸை "மிகவும் மோசமானது" என பத்திரிகையாளர் பாப் வுட்வர்டிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புத்தகம் குறித்து பதிலளித்துள்ள அதிபர் டிரம்ப், இந்த பெருந்தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதை தவிர்க்கவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை சுமார் 1,90,000 பேர் இறந்துள்ளனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, அதிபர் டிரம்ப், பாப் வுட்வர்டிடம் கூறுகையில், "இந்த வைரஸ் காற்று வழியே பரவும். தொடுதல் மூலம் பரவுவதைவிட இந்த நிலை கடினமானது. நீங்கள் எதையும் தொட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் காற்று? நீங்கள் சுவாசித்துதான் ஆகவேண்டும். அது வழியே வைரஸ் பரவிவிடும். எந்த காய்ச்சலையும் விட இது மிகவும் மோசமானது" என்று பேசியுள்ளார்.
ஆனால், மார்ச் 10ஆம் தேதி பொதுமக்களிடம் பதட்டப்படாமல் இருக்குமாறும், அது தானாகவே போய்விடும் என்றும் கூறியுள்ளார் டிரம்ப்.
அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் கழித்து கொரோனா வைரஸை தேசிய அவசரநிலையாக அமெரிக்கா அறிவிக்க, பத்திரிகையாளர் பாபிடம் பேசிய டிரம்ப், "நான் இதை குறைத்து காண்பிக்கவே விரும்பினேன். இப்போதும் அதையே விரும்புகிறேன். ஏனெனில் எனக்கு பதட்டத்தை மக்களிடம் உருவாக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
அரியலூர் மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அச்சம் காரணமா?
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாகவே அந்த மாணவர் தற்கொலைசெய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
கிணற்றிலிருந்து மாணவரின் உடலை மீட்ட செந்துறை காவல்துறையினர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ரஃபால் போர் விமானங்கள்: இந்திய விமானப்படை சேவையில் நாளை அர்ப்பணிக்கப்படும் 5 விமானங்கள்
இந்திய விமானப்படையில் ரஃபால் போர் விமானங்கள் நாளை முறைப்படி இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய விமானப்படையின் பலத்தை பெருக்கும் நோக்குடன் பிரான்ஸ் நாட்டின் ரஃபால் விமான நிறுவனத்திடம் இருந்து இரட்டை எஞ்சின்கள் கொண்ட 36 போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கங்கனா ரனாவத் நேரடி சவால்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பைக்கு வந்துள்ள நிலையில், இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம், நாளை உங்கள் அடாவடித்தனம் ஒடுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பிற்பகல் 3.40 மணியளவில் காணொளி வாயிலாக அவர் எதிர்வினையாற்றினார்.
அதில் "உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். காலம் மாறும், உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் அடாவடித்தனம் நொறுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உங்களுடைய செயல் கொடூரமானது, பயங்கரமானது" என்று கூறி காஷ்மீரி பண்டிட் நிலையை மேற்கோள்காட்டி கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா உயிரிழப்பை தடுக்க பிளாஸ்மா சிகிச்சை உதவாது: ஐசிஎம்ஆர்
கோவிட்-19 வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆய்வில், இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா சிகிச்சையின் செயல் திறனை ஆய்வு செய்ததாகவும் கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 14ஆம் தேதிவரை பல தரப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை கண்காணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: