You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: பிரேசிலில் 10 லட்சத்தை தாண்டியது நோய்த்தொற்று பாதிப்புகள் மற்றும் பிற செய்திகள்
பிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்த எண்ணிக்கையை கடக்கும் இரண்டாவது நாடு பிரேசில்.
பிரேசிலில் குறைந்த அளவில் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ள நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு உச்ச நிலையை அடைவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆக கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரேசிலில் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் ஏழை மற்றும் பூர்வகுடி மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் இவ்வளவு தீவிரமாக சென்றுகொண்டிருக்க, அந்த நாட்டின் அதிபரான தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட ஜெயிர் போல்சனாரோவோ இந்த விவகாரத்தில் தன் மீது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்கவில்லை.
மேலும், சமூக விலகல் அறிவுரைகளை கடைபிடிக்காத அவர் அது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார்.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், "நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்" என்று கூறினார்.
பிரேசில் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 22,19,675 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மகாதீர் முகமது மீண்டும் மலேசிய பிரதமர் ஆவாரா?
மலேசியாவில் எந்நேரமும் திடீர் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் அறிவிக்கப்பட வேண்டுமென அவரது தலைமையிலான பி.கே.ஆர் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதை எதிர்க்கட்சி கூட்டணியான 'பக்காத்தான் ஹராப்பா'னின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக் கொள்வது உறுதியாகியுள்ளதால் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சர்வதேச யோகா தினம்: யோகா எப்படியெல்லாம் செய்யக்கூடாது? தவறாக செய்தால் என்ன ஆபத்து?
ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் உலகின் பல பகுதிகளை அனைவரும் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் உடற்பயிற்சி, யோகா என பலவற்றை இணையத்தில் பார்த்து கற்றுக்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் முயற்சியில் அனைத்து வயதினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு
கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
விரிவாக படிக்க: கீழடி - கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: சமீபத்திய மோதலுக்கு 3 பெரிய காரணங்கள்
இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் இரு நாட்டிற்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணங்களை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: