You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: திவாலாகும் நிறுவனங்கள் - என்ன நடக்கிறது சர்வதேச அளவில்? மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸ்: திவாலாகும் நிறுவனங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் வணிகம் பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவின் பிரபலமான பல்பொருள் அங்காடியான ஜெ.சி.பென்னி திவால் ஆகும் நிலையில் உள்ளது. 118 ஆண்டுகள் பழமையான நிறுவனமான ஜெ.சி.பென்னிக்கு அமெரிக்கா முழுவதிலும் 850 கிளைகள் உள்ளன, 80 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனம் திவால் அறிவிக்கையை கொடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக ஜெ. க்ரியூ நிறுவனம் கடந்த மாதம் திவால் அறிவிக்கை கொடுத்தது. ஜெ.சி.பென்னி நிறுவனம் திவால் நிலைக்குச் சென்றதற்கு கொரோனா மட்டுமே காரணம் அல்ல. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார பெரும் அழுத்தத்தில் கூட தப்பித்த அந்த நிறுவனம், இணைய விற்பனை வந்த பிறகு தனது பொலிவை இழக்கத் தொடங்கியது.
அமெரிக்காவில் கொரோனாவுடன் போரிடும் குடியேறிகள்
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளவர்களை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்பது தொடர்பான திட்டத்தை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ஆராய்ந்தும் விவாதித்தும் வருகிறது. விரைவில் இந்த திட்டம் தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே அமெரிக்காவிற்கு வந்து படித்து, பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்படும்.
விரிவாகப் படிக்க:ஆவணங்கள் இல்லை, அன்பு மட்டுமே உண்டு: அமெரிக்காவில் கொரோனாவுடன் போரிடும் குடியேறிகள்
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க:சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
விண்வெளி, விமானம், அணுசக்தி, மின்சாரம் - முக்கிய துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த 20 லட்சம் கோடி மதிப்புடைய பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கடந்த செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த மூன்று நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வந்தார்.
விரிவாகப் படிக்க:விண்வெளி, விமானம், அணுசக்தி, மின்சாரம் - முக்கிய துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி
கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ள சூழலில், வேலையின்மை, நோய்த்தொற்று அபாயம், அத்தியாவசியத் தேவைகள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ள, மும்பையின் ஆரே வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் அடுத்த பிரச்சனை பருவமழை. மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அங்கு முறையான வீட்டு வசதி இல்லாமல் வசிக்கும் தமிழர்கள் ஊர்திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
விரிவாகப் படிக்க:கொரோனா ஊரடங்கால் உணவில்லை: மும்பை காட்டுக்குள் தவிக்கும் தமிழர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: