You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” - WHO புதிய எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்
“கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒருவேளை கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு “பெரும் முயற்சிகள்” தேவைப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சமீபத்திய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
“நமது சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பரவி வரும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறலாம். மேலும், இது முற்றிலும் அழிய கூடிய நிலையை அடையாமலும் இருக்கலாம்” என்று காணொளி வாயிலாக ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மைக் ரையன் கூறினார்.
“எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம்.”
“கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்” என்பதை கணிப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது இந்தியிலேயே நிகழ்த்துகிறார். இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு என்பது இந்தியிலேயே நடக்கிறது.
முக்கியமான இந்த காலகட்டத்தில் இந்தி தெரியாத மாநில மக்களுக்கு இந்தத் தகவல்கள் தேவையில்லையா?
நிர்மலா சீதாராமன் அறிவித்தது என்னென்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு குறித்த விவரங்களை அறிவிக்கும் முன்பு இதுவரை இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை தனது செய்தியாளர் சந்திப்பின்போது நிர்மலா சீதாராமன் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் பட்டியலிட்டனர்.
"அரசு சொன்னதைக் கேட்காததால்தான் கோயம்பேட்டிலிருந்து தொற்று ஏற்பட்டது"
கோயம்பேட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிவதால், தற்காலிக இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள் ஏற்கவில்லை; இதன் காரணமாகவே அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் தொற்று பரவியது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
1,050 கி.மீ நடை பயணம், சாலையோர பிரசவம் - ஒரு வடமாநில தொழிலாளியின் கதை
சாலையோரம் குழந்தை பெற்றேடுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், குழந்தையைப் பிரசவித்த பின்னரும் 150 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் நடந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளி சகுந்தலா மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு நடந்தே சென்றுகொண்டு இருந்தபோது பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பெற்றெடுத்தார்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் ஊரடங்கு: 1,050 கி.மீ நடை பயணம், சாலையோர பிரசவம் - ஒரு வடமாநில தொழிலாளியின் கதை