You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Money Heist: திரைப்பட பாணியில் விமான நிலையத்தில் நடந்த திருட்டு சம்பவம் மற்றும் பிற செய்திகள்
திரைப்பட பாணியில் விமான நிலையத்தில் நடந்த திருட்டு சம்பவம்
திரைப்பட பாணியில் ஒரு திருட்டு சம்பவம் விமான நிலையத்தில் அரங்கேறி உள்ளது. இந்தியாவில் இல்லை லத்தீன் அமெரிக்க தேசமான சிலியில். கைகளில் ஆயுதங்களுடன் வந்த திருட்டு கும்பல், கண நேரத்தில் ஏறத்தாழ 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருடி சென்றுள்ளது. வெளிநாட்டிலிருந்து டாலர்களாகவும், யூரோகளாகவும் 15 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பணம் விமானம் மூலம் சிலி வந்துள்ளது. இது சிலியில் உள்ள ஒரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணம்.
இதனைத் தெரிந்து கொண்ட திருட்டு கும்பல், கைகளில் ஆயுதங்களுடன் விமானநிலையத்தில் உள்ள கிடங்குக்குச் சென்று அந்த பணத்தைத் திருடி உள்ளது. பின் இந்த திருட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைத் தனியாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, அதனையும் எரித்துவிட்டது.
கொரோனா: ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கான விசாக்கள் நிறுத்திவைப்பு
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விரிவாகப் படிக்க:ஏப்ரல் 15 வரை இந்தியாவுக்கான விசாக்கள் நிறுத்திவைப்பு
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு: ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை
பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார். 67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி வன்முறை : 'போலீசார் சிறப்பாக செயல்பட்டனர்' - மக்களவையில் அமித் ஷா
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் அண்மையில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று (மார்ச் 11) மக்களவையில் சட்டப்பிரிவு-193-இன் கீழ் நடந்த விவாதத்தில் உள்துறையமைச்சர் அமித் ஷா பேசினார். டெல்லி வன்முறை சம்பவங்களை 36 மணிநேரத்தில் போலீசார் கட்டுப்படுத்தினர் என்று குறிப்பிட்ட அமித் ஷா, ''பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு பிறகு எந்த கலவரமும் நடக்கவில்லை என்று நான் பதிவு செய்கிறேன். நடந்த வன்முறை சம்பவங்களை அரசியலாக்க முயற்சிகள் நடைபெற்றன'' என்று கூறினார்.
விரிவாகப் படிக்க:டெல்லி வன்முறை : ‘போலீசாரை பாராட்டுகிறேன்’ - அமித் ஷா
கொரோனா வைரஸ்: ''யாரை தொடர்புகொள்வது?" - இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழர்
கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீநித்தின் ஜெயபால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இத்தாலியில் சிக்கியுள்ளார். இந்தியாவிற்கு திரும்புவதற்கான உதவிகள் வேண்டி பலமுறை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொள்வதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: