You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள்
கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறி கடந்த டிசம்பர் மாதம் இந்த பதவிநீக்க விசாரணையை ஜனநாயக கட்சி முன்மொழிந்திருந்தது.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பதவிநீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் பிறகு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்காவின் முதல் அதிபராக டொனால்டு டிரம்ப் உருவெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்ட இரண்டில் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது பதவியை இழந்திருப்பார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அமெரிக்காவின் அதிபராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்றிருப்பார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யிடம் வருமான வரி விசாரணை
சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தில் நடித்த நடிகர் விஜய் ஆகியோரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்திவருகிறது.
முதலில் நெய்வேலியில் நடிகர் விஜய் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புத் தலத்தில் விசாரணை நடந்தது. பிறகு விஜய்-யின் சென்னை சாலிகிராமம் வீடு மற்றும் நீலாங்கரை வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது.
டெல்லி தேர்தல் 2020: மீண்டும் வெல்வாரா கேஜ்ரிவால்?
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிராக அரசியல் களம் காணும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அவர் சார்ந்த ஆம் ஆத்மி கட்சியினரும், தலைநகரில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எதிர்பார்ப்புடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது ஆட்சியின் சாதனைகளாக கருதப்படும் திட்டங்களும், அவரது ஆளுகை தொடர்பான சர்ச்சைகளையும் அலசுகிறது இந்த சிறப்புக் கட்டுரை.
விரிவாக படிக்க: டெல்லி தேர்தல் 2020: மீண்டும் வெல்வாரா கேஜ்ரிவால்?
புதிய வரித் திட்டம் வரி செலுத்துவோருக்கு லாபமா? நஷ்டமா?
பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விதி விலக்குகள் அற்ற புதிய வருமான வரித்திட்டத்தை தேர்ந்தெடுப்பதா அல்லது ஏற்கனவே அமலில் உள்ள வருமானவரித்திட்டத்தையே பின்பற்றுவதா என மாத ஊதியம் அதிகம் பெரும் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, குறைக்கப்பட்ட வரிவிகித திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 வரிவிலக்குத் திட்டங்களில் 70 திட்டங்கள் மூலம் பயன்பெற முடியாது என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
விரிவாக படிக்க: புதிய வரித் திட்டம் வரி செலுத்துவோருக்கு லாபமா? நஷ்டமா? எந்த வரி சலுகைகள் பறிபோகும்?
"பாகிஸ்தானுக்கு போகாத முஸ்லிம்கள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை"
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பிபிசி நடத்திய சிறப்பு நேர்காணல்.
கேள்வி: முந்தைய பல தேர்தல்களைப் போலவே, பாஜகவும் தனது 'பிரம்மஸ்திரம்' யோகி ஆதித்யநாத்தை பிரசாரத்திற்காக களமிறக்கியுள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் தேர்தல் பிரச்சார மைதானத்திற்குள் நுழைந்தவுடன் நிலவரம் ஏன் சூடாகிறது?
பதில்: இதோ பாருங்கள். உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார்கள். அதேபோல, நானும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன் என்பதால் தான் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க இங்கு வந்துள்ளேன். நாங்கள் பிரச்சனை பற்றி பேசுகிறோம். வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் தேர்தலில் முன்வைக்கிறோம். நல்லாட்சி மற்றும் தேசியவாத பிரச்சனைகளைப் பேசுகிறோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: